சிரம்பான், ஜூன் 25-
சிரம்பான், சுங்கை காடுட், தாமான் துவாங்கு ஜபார் பகுதியில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்திர பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு நாளை மறுநாள் ஜுன் 27 ஆம் தேதி வியாழக்கிழமை கொடியேற்று விழா வெகுசிறப்பாக நடைபெறவிருக்கிறது.
காலை 9.31 மணிக்கு தமிழ் வேதங்கள் ஓத, மங்கல வாத்தியம் முழுங்க கொடியேற்று விழா நடைபெறும் என்று ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
திருவிழாவின் தொடக்கத்திற்கான அறிகுறியாக நோன்பிருந்து நூற்ற வெள்ளைத் துணியில், இடபமும் மற்ற மங்கல பொருட்களையும் வரைந்து, வழிபட்டு, திருமாமறைகள் ஓதி, பண்ணிசையோடு பெருமைமிகு இடபகொடி மரத்தில் ஏற்றும் விழா நடைபெறும்.
முன்னதாக, காலை 7.01 மணிக்கு அம்மை அப்பர் கலச வழிபாடு சிவவேள்வி உட்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
ஆலய வருடாந்திர திருவிழா வரும் ஜுலை 7 ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெறும். ஜுன் 27 ஆம் தேதி முதல் ஜுலை 9 ஆம் தேதி சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
நாளை மறுநாள் நடைபெறும் கொடியேற்று விழாவில் சுற்றுவட்டார மக்கள் திரளாக வருகை தந்து எல்லா வல்ல அம்மையப்பர் திருவருள் பெற்று இன்புறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.