புத்ராஜெயா, மார்ச் 28-
ஆஸ்திரேலிய பிரஜையை கொலை செய்ததற்காக தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட ஆடவருக்கு புத்ராஜெயா-விலுள்ள கூட்டரசு நீதிமன்றம் 35 ஆண்டுகள் சிறைத்தண்டனையாக குறைத்துள்ளது.
39 வயதுடைய லோ கியான் பூன் -னுக்கு 12 பிரம்படிகளை விதித்து தீர்ப்பளித்த மூவர் அடங்கிய நீதிபதிகள் அமர்வுக்கு தலைமைத் தாங்கிய நீதிபதி டத்தோ சபாரியாஹ் மோஹட் யூசோப், அவர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து அந்த சிறைத்தண்டனை கணக்கிடப்படுவதாக கூறினார்.
கடந்த 2003ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி, ஹான்ஸ் ஹெர்ஸ்வ்க் என்பவரை சிலாங்கூர், சுபாங் ஜெயா-விலுள்ள அவரது வீட்டில் மற்றொரு நபருடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். பாதிக்கப்பட்டவரின் உடலில் சுமார் 23 வெட்டுக்காயங்கள் இருந்ததை தொடர்ந்து குற்றச்சாட்டப்பட்டிருக்கும் லோ கியான் பூன் மறுநாள் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.
தொடக்கத்தில் அவ்விருவருக்கு 10 ஆண்டுகள் சிறையை உயர்நீதிமன்றம் வழங்கியிருந்த நிலையில், அவ்விருவரும் குற்றம் புரிந்ததை உறுதிபடுத்திய மேல்முறையீட்டு நீதிமன்றம், லோ கியான் பூன் -க்கு தூக்குத்தண்டனையையும் மற்றொரு நபரை சிறையில் வைக்கவும் உத்தரவிட்டது.
கடந்த 2010ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி கூட்டரசு நீதிமன்றம் அந்த தண்டனையை நிலைநிறுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.