சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் முன்னாள் பணியாளரான மலேசியாவைச் சேர்ந்த 36 வயதான துரைராஜ் சந்திரன் என்பவர், விமானத்தில் வழுக்கி கீழே விழுந்து, தலையில் பலத்த அடிப்பட்டதாக கூறி, அந்த முன்னணி விமான நிறுவனத்திடமிருந்து 17 லட்சம் சிங்கப்பூர் டாலர் அல்லது 59 லட்சம் வெள்ளி இழப்பீடு கேட்டு, வழக்கு தொடுத்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி சான் ஃபிரான்சிஸ்கோவில் இருந்து சிங்கப்பூருக்கு வந்து கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் ஏ 350 ரக விமானத்தில் பணியாற்றிக்கொண்டு இருந்த போது தாம் வழுக்கி விழுந்ததாக துரைராஜ் சந்திரன் கூறுகிறார்..
ஏறக்குறைய 17 மணி நேரம் நீடித்த பயணத்தில் அந்த விமானம் சிங்கப்பூரை நெருங்கிக் கொண்டிருந்தபோது தாம் கீழே விழுந்ததில் தலையின் பின்பகுதியில் அடிபட்டதாக துரைராஜ் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பான வேலை முறையையும், பணிபுரிவதற்குப் பாதுகாப்பான வேலையிடத்தையும் வழங்க Singapore Airlines தவறிவிட்டதாக துரைராஜ் குற்றஞ்சாட்டுகிறார்.
விமானத்தில் போதிய பராமரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்குமானால், தரையில் பசையுள்ள எண்ணெய்ப் பொருளின் மீது துரைராஜ் கால் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது அவரின் வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளனர்.