சிலாங்கூர் மாநில அரசின் நலத் திட்டங்கள் மூலம் பூர்வக்குடியினர் முழுமையாக பயன்பெறுவதை உறுதி செய்வதன் மூலம் அந்த சிறுபான்மையினரின் நலன் காக்க தாம் பாடுபடவிருப்பதாக ஒற்றுமை அரசின் வேட்பாளரான பாங் சாக் தாவோ உறுதியளித்துள்ளார்.
தாம் கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் குழு சார்ந்த நிகழ்வுகளுக்குப் புத்துயிரளிப்பதில் அத்தரப்பினருக்கு உதவும் வகையில் சிறப்பு நிதியை உருவாக்கவுள்ளதாக பாங் சாக் தாவோ அறிவித்துள்ளார்.
தாம் அவர்களுடன் நடத்திய சந்திப்பின் போது அவர்கள் ஆடம்பர மேம்பாடுகளை விரும்பவில்லை. மாறாக, தங்கள் அனைவரையும் ஒரே குழுவாக ஒன்றிணைக்கக்கூடிய திட்டங்களையே அவர்கள் விரும்புகின்றனர். இதன் தொடர்பில் அவர்களுக்கான ஒத்துக்கீட்டைப் பெற்றுத் தருவது தமது முதன்மை இலக்காக இருக்கும் என்று டிஏபி- யை சேர்ந்த பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளரான பாங் சாக் தாவோ தெரிவித்துள்ளார்.
நான்கு பூர்வக்குடியினர் கிராமங்களுக்குத் தாம் சென்ற வேளையில் அவர்களிடமிருந்து நேர்மறையான பதில் கிடைத்ததாக நேற்று உலு சிலாங்கூர், கம்போங் ஓராங் பூலோ தெலூர் பூர்வக்குடி கிராமத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் இதனை குறிப்பிட்டார்.
பூர்வக்குடி மக்களின் இந்த ஆதரவு எதிர்வரும் மே 11ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலின் போது வாக்குகளாக மாறும் என எதிர்பார்ப்பதாக பாங் சாக் தாவோ நம்பிக்கை தெரிவித்தார்.
தங்களின் நலனைப் பாதுகாப்பதற்கான சரியான தேர்வு ஒற்றுமை அரசாங்கம்தான் என்பதை அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர் என்று பாங் சாக் தாவோ குறிப்பிட்டார்.