ஜொகூர்,மார்ச் 4 –
ஜொகூர் மாநில குடிநுழைவுத்துறை இரண்டு நாள் மேற்கொண்ட திடீர் சோதனையில் குடிநுழைவு பயண ஆவணத்தை சட்டவிரோதமாக பயன்படுத்திய 66 வெளிநாட்டவர்கள் உட்பட அவர்களை வேலைக்கு அமர்த்திய நான்கு உள்ளூர்வாசிகள் கைது செய்யப்பட்டனர்.
இதில் ஜொகூர் பாரு, செகாமட், பத்து பஹாட், மெர்சிங் ஆகிய நான்கு இடங்கள் உள்ளடங்குவதுடன் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்ட இந்த சோதனையில் பொழுதுபோக்கு மையங்கள், reflexology மையங்கள், உணவகங்கள் அனைத்தும் அமலாக்க அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த திடீர் சோதனையில் 324 நபர்களின் ஆவணங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டதாக ஜொகூர் குடிநுழைவுத்துறை தலைவர் பஹாருடின் தாஹிர் கூறினார்.
சோதனையில் வளாக உரிமையாளர்களான 21, 43 வயதிற்கு உட்பட்ட நான்கு உள்ளூர்வாசிகள் கைது செய்யப்பட்டதுடன் 18 மற்றும் 54 வயதுடைய வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டதாக பஹாருடின் தாஹிர் விவரித்தார்.