வரும் ஜனவரி 25 ஆம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச விழாவையொட்டி கெடா மாநிலத்திற்கு பொது விடுமுறை என்று அம்மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான தைப்பூசத்திற்கு பொது விடுமுறை அளிப்பதற்கு இன்று நடைபெற்ற கெடா மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் சனூசி முகமட் நூர் தெரிவித்தார்.
கெடா மாநிலத்தை சேர்ந்த இந்துக்கள் தங்கள் குடும்பத்தினருடன் தைப்பூச விழாவை கொண்டாடி, தங்களின் நேர்த்திக் கடனை செலுத்துவதற்கு ஏதுவாக இந்த பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக இன்று அலோர் ஸ்டார், விஸ்மா டாருல் அமானில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் இதனை குறிப்பிட்டார்.