குளுவாங், தாமான் லியான் செங்கில் கடந்த வெள்ளிக்கிழமை நபர் ஒருவரை கொடூரமாக தாக்கிய சம்பவ தொடர்பில், மூன்று பேரை தனி தனி சோதனையின் போது போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று நள்ளிரவு 1.15 மணியளவில் 20 க்கும் 30 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்நபர்கள் சிம்பாங் ரெங்காம் மற்றும் இஸ்கண்டார் புத்ரி ஆகிய இடங்களில் மேற்கொண்ட சோதனையின் போது கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அந்நபர்கள் போதைப் பொருள் எதுவும் உட்கொள்ளாதது சோதனையில் தெரிய வந்த வேளை, அதில் ஒருவர் மீது ஏற்கனவே இரண்டு குற்றப்பதிவுகள் இருப்பது விசாரணையில் தெரிய வந்ததாக மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் பஹ்ரின் முகமது நோ தெரிவித்தார்.
இச்சம்பவத்தின் போது அருகிலுள்ள மோட்டார் சைக்கிள் பட்டறையில் இருந்த ஆயுதங்களை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவரை அந்நபர்கள் தாக்கியதில் பலத்த காயங்களுக்கு அவர் இலக்காகியிருப்பதாக பஹ்ரின் முகமது கூறினார்.
முன்னதாக, ஒரு மோட்டார் சைக்கிள் பட்டறைக்கு முன்பு நபர் ஒருவரை மூன்று பேர் வன்மையான முறையில் தாக்குவதை போன்ற காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.