புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், பேரா மாநில டிஏபி தலைவருமான டத்தோ ஙே கூ ஹாம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் பிடிபட்டுள்ள நபருக்கு எதிரான தடுப்புக்காவல் நாளை புதன்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புலன் விசாரணைக்கு உதவும் பொருட்டு, இன்று காலையில் ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அந்த நபர் கொண்டு வரப்பட்டார். கடந்த ஜனவரி 12 ஆம் தேதி கைது செய்யப்பட்ட அந்த நபருக்கு முதலில் ஐந்து நாள் தடுப்புக்காவல் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
30 வயது மதிக்கத்தக்க அந்த நபர், கடந்த வாரம் புதன்கிழமை அதிகாலையில் பேரா, மஞ்சோங் அருகில் ஆயர் தாவாரில் உள்ள ஙே கூ ஹம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.