கோலாலம்பூர், மார்ச் 3 –
வருகின்ற மார்ச் 9 ஆம் நாள் அன்று, 2024 ஆம் ஆண்டுக்கான வூமன்ஸ் மார்ச் மலேசியா பேரணி நடத்துவதற்கான நோட்டிசை தொடர்ந்து போலிசார் தவிர்த்து வருவதாக அந்த பேரணியின் ஏற்பாட்டு குழுவினர் தங்களின் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர் என மலேசிய கினி இணையத்தளச் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
அக்தா பெர்ஹிம்புனான் அமான் 2012, சட்டத்தின் கீழ், வருகின்ற 9 மார்ச் உலக பெண்கள் தினம் முன்னிட்டு, தலைநகர் சோகோ பேரங்காடியின் முன் அமைதி பேரணி நடத்துவதற்கான நோட்டிசைப் பெற டாங் வாங்கி போலீசார் 4 முறை தவிர்த்து வருவதாக ஏற்பாடு குழுவினர் கூறி உள்ளனர்.
இரண்டு முறை அந்த காவல் நிலையத்திற்கு சென்று நோட்டிசை போலிசாரிடம் ஒப்படைக்கும் பொழுது அவர்கள் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்ட முத்திரையை குத்த வில்லை என்றும், பிறகு தங்களின் வழக்கறிஞர் நேரடியாக சென்று வழங்கிய போது அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ள தவிர்த்தனர் என்றும், மேலும் இரண்டு முறை கூரியர் சேவை வழி அனுப்பியபோது எந்தவொரு தகவலும் தங்களுக்கு வரவில்லை என ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து, நோட்டிஸ் வழங்குவதற்கான இறுதி நாள், நாளை என்பதால், மேலும் ஒரு முறை முயற்சி செய்து பார்க்க தம் குழு திட்டமிட்டுள்ளதாக, அவர்கள் கூறிய செய்தியை மலேசிய கினி வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.