மலாக்கா முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ சுலைமான் முகமட் அலியின் பதவி விலகல், மாநில தலைத்துவத்தையும், கட்சியின் தலைவர்களையும் ஒன்றிணைக்கும் நோக்கத்தை கொண்டதாகவே பார்க்கப்படுகிறது. சுலைமான் முகமட் அலி, தனது பதவி விலகலுக்கு பிறகு இன்று காலை 11 மணியளவில் ஆயர் குரோ, ஶ்ரீ நெகிரி கட்டடத்திலிருந்து வெளியேறியதாக ஊடக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது மலாக்கா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக தேர்தெடுக்கப்பட்டிருக்கும் மாநில அம்னோ தொடர்புக்குழுத் தலைவர் டத்தோ ஶ்ரீ அப்துல் ரவுப் யூசோ, இப்பதவிக்குப் பொருத்தமானவர் என்றும், மலாக்கா மாநிலத்தின் வளர்ச்சிக்கும் சுபிட்சத்திற்கும் ஏற்றவர் என்றும் வட மலேசியா பல்கலைகழகத்தின், பேராசிரியரும் அரசியல் ஆய்வாளருமான டாக்டர் ருஸ்டி ஒமார் கருத்துரைத்தார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற அம்னோ, -தேசிய முன்னணி தலைமையில் மாநில ஆட்சியை நிறுவியது.
எனினும் மலாக்கா மாநிலத்தில் தற்போது ஏற்பட்டுள்ள தலைமைத்துவ மாற்றமானது, தலைமைத்துவ பிரச்னையாகவோ, அல்லது பிளவு ஏற்பட்டுள்ளதாகவோ பார்க்கவில்லை. மாறாக, மாநிலத்தின் நடப்பு சூழலை, ஒற்றுமை அரசாங்கம் சீர்செய்யும் நோக்கத்தைக் கொண்டது என்றே கருதப்படுவதாக அரசியல் ஆய்வாளர் டாக்டர் ருஸ்டி தெரிவித்துள்ளார்.