ஜன.11-
ம.இ.கா.வின் முன்னாள் தலைவரும், மலேசியாவின் முன்னாள் சுகாதார அமைச்சருமான டான் ஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியத்திற்கு 2025ஆம் ஆண்டுக்கான பிரவாசி பாரதிய சம்மான் விருது வழங்கப்பட்டது. இந்த விருது, இந்திய அரசால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் வழங்கப்படுகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களின் சாதனைகளைப் பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.
டான் ஸ்ரீ சுப்ரமணியம் 2008 முதல் 2018 வரை அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், இந்திய சமூகத்திற்காகப் பல முக்கியத் திட்டங்களை முன்னெடுத்தார். குறிப்பாக, இந்திய விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவை அமைத்தது, My Daftar , Mega My daftar பரப்புரை மூலம் குடியுரிமைப் பிரச்சினைகளைத் தீர்த்தது, தமிழ்ப்பள்ளிகளுக்கான ஆண்டு நிதி ஒதுக்கீடு, உயர்க்கல்வியில் இந்திய மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் வழங்கியது ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
அவரது முயற்சியால் தொடங்கப்பட்ட SITF , Sedic போன்ற அமைப்புகள், பின்னர் MITRA வாக உருமாறி இந்திய சமூகத்தின் கல்வி, நலன், சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டன. தமிழ்ப்பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், உயர்க்கல்வியில் இந்திய மாணவர்களின் வாய்ப்புகளை அதிகரிக்கவும் அவர் முக்கிய பங்காற்றினார்.
2017 இல் தொடங்கப்பட்ட மலேசிய இந்தியத் திட்ட வரைவு, இந்திய சமூகம் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. டான் ஸ்ரீ சுப்ரமணியத்தின் இந்த பங்களிப்புகளை கருத்தில் கொண்டே இந்திய அரசு அவருக்கு இந்த உயரிய விருதை வழங்கியுள்ளது.