பொருளாதார நெருக்கடி, பிரிந்து கிடக்கும் மலாய்
சமூகத்தின் ஆதரவு ஆகிய காரணங்களால் கடும் சவால்கள் நிலவிய
போதிலும் தங்கள் வசமுள்ள மூன்று மாநிலங்களான சிலாங்கூர், நெகிரி
செம்பிலான், பினாங்கு ஆகியவற்றை பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி
தக்க வைத்துக் கொள்ளும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து
தெரிவித்துள்ளனர்.
ஹராப்பான் கூட்டணிக்கு கடும் எதிர்ப்பைத் தந்து வரும் பெரிக்கத்தான்
நேஷனல் கூட்டணி, அதிகரித்து வரும் அதிருப்தி, மலாய் சமூகத்தில்
பெருகி வரும் பழைமைவாதப் போக்கு ஆகியவற்றைப் பயன்படுத்தி தனது செல்வாக்கை உயர்த்திக் கொள்ளும் அதேவேளையில் ஒற்றுமை
அரசாங்கத்திற்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் கடும் மிரட்டலையும் கொடுக்கும் எனவும் எதிபார்க்கப்படுகிறது.
ஒற்றுமை அரசாங்கம் ஆட்சியை அமைத்து ஏறக்குறைய ஒன்பது
மாதங்கள் ஆகின்றன. ஹராப்பான் வசமுள்ள மூன்று மாநிலங்களில்
வழங்கப்பட்ட சேவையை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில் அந்த கூட்டணிக்குச் சாதகமான சூழல் நிலவுவதை அரசியல் பார்வையாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.