மலேசியாவில் பெரியளவில் லாபத்தை ஈட்டும் தனியார் துறையாக கருதப்படும் வங்கித் தொழில்துறை, நோன்பு பெருநாளை முன்னிட்டு, தனது அரசு ஊழியர்களுக்குக் கூடுதலாக ஒரு மாதச் சம்பளத்தை அறிவித்துள்ள சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும் என்று என்.யு.பி.இ எனப்படும் தேசிய வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த 3 ஆண்டு காலமாக, வரவை விட கூடுதல் செலவினத்தை சிலாங்கூர் மாநில அரசு கொண்டிருந்த போதிலும், தனது ஊழியர்களுக்கு நோன்பு பெருநாள் அன்பளிப்பாக கூடுதலாக ஒரு மாதச் சம்பளத்தை வழங்குவதற்கு தயாராக இருக்கிறது என்று என்.யு.பி.இ. யின் பொதுச் செயலாலர் ஜெ.சோலமன் தெரிவித்தார்.
ஆனால், ஒவ்வொரு ஆண்டும் பெரும் லாபத்தைப் பதிவு செய்யும் வங்கிகள், தங்களின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக விளங்கும் வங்கி ஊழியர்களுக்குக் கூடுதல் சம்பளைத்தை வழங்குவதற்கு ஏன் முன் வரக் கூடாது என்று ஜெ.சோலமன் கேள்வி எழுப்பியுள்ளார்.