அரசு மருத்துவமனைகளில் தற்போது பணியாற்றி வரும் 12 ஆயிரத்து 700 ஒப்பந்த மருத்துவர்கள், அடுத்த 3 ஆண்டுகளில் நிரந்தரமாக்கப்படுவார்கள் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று உத்தரவாதம் அளித்துள்ளார்.
இவ்வாண்டில், கிட்டத்தட்ட 4 ஆயிரத்து 300 ஒப்பந்த மருத்துவர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள் என்றும், இதற்காக அரசாங்கம் 1,700 கோடி வெள்ளியை செலவிடவேண்டி வரும் என்று நிதி அமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார் மக்களவையில் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட ஒப்பந்த மருத்துவர்கள் நிரந்தரமாக்கப்பட்ட போதிலும், ஒப்பந்தக் கால மருத்துவர்களை நியமிக்கும் நடைமுறை தொடரும் என்று பிரதமர் தெளிவுப்படுத்தினார்.
அதே வேளையில், ஒப்பந்த மருத்துவர்கள் விடுத்துள்ள இதர கோரிக்கைகள் அனைத்தும் கட்டங்கட்டமாக தீர்க்கப்படும் என்று அன்வார் குறிப்பிட்டார்.