போதைப்பொருள் கடத்தல் கும்பல் மற்றும் குற்றச்செயல்களுக்குத் துணை போக வேண்டாம் என்று அரச மலேசிய போலீஸ் படையின் அதிகாரிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத் தொழிப்பு பிரிவின் இயக்குநர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைதீன் பிச்சை நினைவுறுத்தியுள்ளார்.
போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவின் அனைத்து மாநிலங்களின் போலீஸ் தலைவர்களுடன் இன்று இயங்கலை வழி நடத்திய சந்திப்பில் அரச மலேசிய போலீஸ் படையின் நம்பகத்தன்மை, நேர்மை மற்றும் கட்டொழுங்கு ஆகியவற்றை கட்டிக்காக்க வேண்டிய அவசியத்தை அயோப் கான் வலியுறுத்தினார்.
இம்மாதம் 16 ஆம் தேதி புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் மிக உயரிய பொறுப்பான குற்றப்புலனாய்வுத்துறையின் சி.ஐ.டி. இயக்குநர் பதவியையேற்கவிருக்கும் அயோப் கான், போலீஸ் படையின் போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவிற்கு தலைமையேற்றுள்ள மாநிலத் தலைவர்களுக்கு வழங்கிய இறுதி நல்லுரையில் போலீஸ் படையின் நம்பகத்தன்மையை வலியுறுத்தி பேசினார்.
நாட்டை செல்லரித்துக்கொண்டு இருக்கும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் தொடர்புடைய குற்றச்செயல்களை முற்றாக துடைத் தொழிப்பதில் போலீஸ் படையினர் நேர்மையுடன் பணியாற்றி, தங்கள் கடற்பாட்டை நிரூபிக்க வேண்டும் என்று அயோப் கான் வலியுறுத்தினார்.