முதியவரை ஏமாற்றியதாக பாரம்பரிய மருத்துவர் மீது குற்றச்சாட்டு

ஆன்மிக சேவையை வழங்கவதாக கூறி, 60 வயதுடைய நபரை ஏமாற்றி 4 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி பெற்று மோசடி செய்ததாக பாரம்பரிய மருத்துவர் ஒருவர் இன்று கோலாலம்பூர், செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

35 வயது பி.விக்னேஸ்வரன் என்ற அந்த பாரம்பரிய மருத்துவர், நீதிபதி சபரியா ஒத்மான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, கோலாலம்பூர், மெனாரா அம்பாங்கில் ஜாலான் யாப் குவான் செங்கில் உள்ள வங்கி ஒன்றில் ஜி. கன்னியாசன் என்பவரை ஏமாற்றி பணம் பறித்ததாக விக்னேஸ்வரன் மீது குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டுள்ளது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், கூடிய பட்சம் 5 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் விக்னேஸ்வரன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS