
மலேசியாவின் பழமை வாய்ந்த நாளிதழ் என்ற பெருமையைத் தாங்கிய தமிழ் நேசன், 1924 ஆம் ஆண்டு தொடங்கி, 94 ஆண்டுக்காலம் செயல்பட்டு, மின் ஊடக வரவு மற்றும் பொருளாதார சிக்கலினால் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதி மூடுவிழா கண்டது.
தமிழ் நேசன் மூடப்பட்டாலும், அந்தப் பழம் பெரும் பத்திரிகையில் பணியாற்றிய முன்னாள் பணியாளர்களின் நல்லுறவும், தொடர்பும் விடுப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஒரு முறை ஒன்று கூடி, தங்களின் தொடர்பைப் புதுப்பித்துக்கொண்டு வருகின்றனர்.
ஏழாவது ஆண்டாக தமிழ் நேசன் பணியாளர்களின் ஒன்றுக்கூடும் நிகழ்வு கடந்த மே முதல் தேதி தொழிலாளர் தினத்தன்று கோலாலம்பூரில் சிறப்பாக நடைபெற்றது.
90க்கும் மேற்பட்ட அதன் முன்னாள் ஊழியர்களின் வருகையுடன் பிரமாண்டமாக நடைபெற்ற அந்தப் பொன்னான நிகழ்வில் தமிழ் நேசன் முன்னாள் பணியாளர்கள் தங்களின் மலரும் நினைவலைகளைத் திசைகளோடு பகிர்ந்துகொண்டனர்.
கு.சா. இராமசாமி
தமிழ் நேசனில் பணியாற்றிய அந்த நாட்களிலேயே அதன் 100 ஆம் ஆண்டு நிறைவு விழாவை எப்படி எல்லாம் கொண்டாட வேண்டும் என்று எங்களுக்குள் பல ஆசைகளையும் திட்டங்களையும் செதுக்கி வைத்திருந்தோம். ஆனால், 2019 ஆண்டில் நிகழ்ந்த சிக்கலினால் நாங்கள் குடும்பமாக வாழ்ந்து வந்த தமிழ் நேசன் தனது இறுதி நாளை சந்திக்கும் என்று நாங்கள் யாரும் எண்ணிப் பார்க்காத ஒன்றாகும் என்று விழாவிற்குத் தலைமையேற்ற முன்னாள் பணியாளர் கு.சா. ராமசாமி தெரிவித்தார்.
15 காசுக்குத் தமிழ் நேசன் நாளிதழை வாங்கி, ஒரு வாசகனாக அதனுடன் பயணிக்கத் தொடங்கிய பிறகு 1970 ஆம் ஆண்டு அந்த மூத்தப் பத்திரிகையில் பணியில் அமர்ந்து, 32 ஆண்டுக்காலம் அதனுடன் இரண்டர கலந்திருந்தேன்.
மகத்தான நிலையில் பல்லாயிரக்கணக்கான வாசகர்களைப் பெற்றிந்த தமிழ் நேசன், பல நிர்வாகம் மாற்றம், அரசியல் கலப்பு மற்றும் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக மூடப்பட்டது என்றாலும், அதில் பணியாற்றிய நாங்கள் இன்று வரை ஐக்கியமாகவே திகழ்கிறோம்.
தமிழ் நேசனில் இருந்த காலக்கட்டத்தில் தொழிற்சங்கவாதியாக இருந்த காரணத்தால், தொழிலாளர்களுக்கான சுதந்திரம், சம்பளம் தொடர்பான விவகாரம் குறித்து அவர்களுக்காக போராட்டத்தில் ஈடுப்பட்ட அந்தக் காலத்தை நினைத்துப் பார்க்கிறேன்.
இதனால் வாரியத் தலைவர் டத்தின் இந்திராணியுடனும், டத்தோ ஶ்ரீ சாமிவேலுவிடமும் சில வாய்ச்சண்டை நிகழ்ந்தது உண்டு. இதனால், சில நாட்கள் பேசிக்கொள்ளமல் இருப்போம், பிறகு நடந்ததை மனதில் வைத்துக்கொள்ளாமல் மீண்டும் நட்பாகிக் கொள்வோம். இதைப் பற்றி நான் சொல்லும்போதே அன்றைய சூழல், அந்தத் தருணத்தில் என்னோடு இருந்தவர்கள் மட்டுமல்லாமல் நான் பேசிய வார்த்தைகளும் கூட என் கண் முன் நிழலாடுகின்றன என்று தமது பழைய நினைவுகளை நினைவுக்கூர்ந்தார் கு.சா. ராமசாமி.
விவேகானந்தன்
தமிழ் நேசன் பத்திரிகையில் 15 ஆண்டு காலம் துணை ஆசிரியராக பணியாற்றி, முருகு. சுப்பிரமணியத்திற்குப் பிறகு தமிழ்நேசன் ஆசிரியராக பொறுப்பேற்றவர் பழம்பெரும் பத்திரிகையாளர் விவேகன் என்ற வே. விவேகானந்தன்.
தமிழ் நேசனில் பணியாற்றிய 36 ஆண்டு காலத்தில், பல ஊர்களுக்குச் சென்று, தோட்டங்களுக்குச் சென்று, நேசன் வாசகர் வட்டம், நேசன் இலக்கிய வட்டம் எனும் திட்டத்தின் மூலமாக பத்திரிகைக்கும், வாசகர்களுக்கும் இடையில் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியதாக விவேகானந்தன் தெரிவித்தார்.
ஒவ்வொரு பகுதியிலும் மக்களுக்குக் கதை எழுதுதல், கட்டுரை எழுதுதல், மற்றும் கவிதை புனைதல் என பல பயிற்சிகளை வழங்கி, பின்னர் அவர்களின் படைப்புகளைப் பத்திரிக்கையில் வெளியிட்டு அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு சேவையை நானும் சக பணியாளர்களும் தொடர்ந்து செய்துகொண்டிருந்தோம்.
வாசகர்களுடனான இச்சந்திப்பின் வாயிலாக வட்டார மக்களுடன் கலந்துரையாடுவது, அவர்களின் வாழ்வியல் முறைகளைத் தெரிந்துகொள்வது என பல நினைவலைகளைச் சேகரித்துக்கொண்டோம். பத்திரிக்கைத் துறையைத் தாண்டி, மக்களோடு மக்காளாக இணைந்து செயல்பட்ட தருணங்கள் சிறந்த ஒரு அனுபவமாக இருந்ததாக 1996 ஆம் ஆண்டு ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுப்பெற்ற விவேகானந்தர் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
எஸ். ஜோசப்
புலவர் சேதுராமன் நிர்வாகியாக இருந்து தமிழ் நேசனை நிர்வகித்துக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் எந்தவொரு பிரச்னையும் இல்லாமல், மன திருப்தியோடு பணியாற்றி வந்தோம் என்று செட்டியார்கள் காலத்தில் தமிழ் நேசனில் சேவையாற்றி எஸ்.ஜோசப் பெருமிதம் தெரிவித்தார்.
பத்திரிகையை அச்சடிக்கும் பகுதியில் நான் பணியாற்றி கொண்டிருந்தேன். இரண்டு வகையான அச்சடிக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தியிருக்கிறேன். ஒன்று அச்சடித்து அதுவே பத்திரிகையை மடித்து விடும். மற்றொன்று அச்சடித்து விடும். ஆனால், அந்த பத்திரிகையை நாம் தான் மடிக்க வேண்டும். நின்றுக்கொண்டே வேலை செய்வொம். யார் தொந்தரவும் இருக்காது. அங்கு பணிப்புரிந்த மற்ற ஊழியர்களோடு பேசிக்கொண்டே வேலையைச் செய்வேம். நேரம் போவதே தெரியாது.
மாலை ஆகிவிட்டால் எல்லோரும் ஒன்றாக தேநீர் அருந்த செல்வோம். தமிழ் நேசனில் வேலை செய்த எல்லோருமே ஒரு குடும்பமாகவே செயல்பட்டோம். ‘நல்ல தொரு குடும்பம் பல்கலைக்கழகம்’ என்பது போல எங்களின் வேலையை நாங்கள் நேர்த்தியாக செய்து கொடுப்போம். தமிழ்நேசனை நிர்வகித்த அன்றைய செட்டியார்களும் எங்கள் மீது அன்பாகவும் இருந்தார்கள்.
ஆனால், 1978 ஆம் ஆண்டு செய்தித்தாள் தொழிலாளர்களின் தேசிய சங்கத்தில் நான் செயலாளராக இருந்த போது பல்வேறான சிக்கல்களையும் தொந்தரவுகளையும் எனக்கு கொடுத்தார்கள். என்னைப் பணியிலிருந்து விலகச்சொல்லியும் நான் மறுத்த காரணத்தால், அவர்களே எனக்கு நோட்டீஸ் வழங்கி பணி நீக்கம் செய்தார்கள். தொழிற்சங்க செயலாளராக இருந்த காலக்கட்டத்தில் நிகழ்ந்த ஒவ்வொரு சம்பவத்தையும் தம்மால் என்றும் மறக்க முடியாது என்று எஸ்.ஜோசப் தமது கடந்த கால நினைவலைகளைப் பகிர்ந்துக்கொண்டார்.
ரகுநாதன்
செட்டியார்கள் காலத்தில் இருந்ததுதான் தமிழ் நேசன் குடும்பம். ஊழியர்களின் சம்பளத்தில் எந்தவொரு நெருக்கடியும் ஏற்படாமல் பார்த்துக்கொண்டார்கள். அவர்களுக்கு வருமானம் இருக்கிறதோ? இல்லையோ? ஒவ்வொரு மாதமும் அந்தக் குறிப்பிட்ட தேதியில் எல்லாம் ஊழியர்களுக்கும் சம்பளத்தை வழங்கிவிடுவார்கள். தமிழ்நேசன் தொழிற்சங்கத்தில் உள்ள ஒப்பந்தம்படி அந்த சம்பளம் சரியாக அனைவரையும் சென்றடைந்தது என்று தமிழ் நேசனின் முன்னாள் செயல்பாட்டு மேற்பார்வையாளரான ரகுநாதன் பழைய நினைவுகளை நினைவுக்கூர்ந்தார்.
அமரர் டத்தோ ஶ்ரீ சாமி வேலுவும் அந்தக் காலக்கட்டத்தில் அனைந்து பணியாளர்களையும் நல்ல முறையில் பார்த்துக்கொண்டு, தமிழ் நேசனையும் சிறப்பான முறையில் வழிநடத்திச் சென்றார். இருந்தபோதிலும் ஆங்காங்கே நிகழ்ந்த சில இடையூறுகளினால் பத்திரிக்கையின் தர்மமும் அழிந்தது. நாளடைவில் தமிழ் நேசன் மூட வேண்டிய கட்டாயத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டது உண்மையிலேயே வருத்தம் அளிக்கும் விஷயமாகும் என்று செட்டியார்களின் நன்மதிப்பைப் பெற்றவரும், தமிழ்நேசனில் பல்வேறு பிரிவுகளின் பணித் தன்மையை நன்கு உணர்ந்தவருமான ரகு என்ற ரகுநாதன் குறிப்பிட்டார்.
வெ. இந்திராணி
டத்தோ ஶ்ரீ சாமிவேலு தலைமையின் கீழ் தமிழ் நேசன் செயல்பட்டுக்கொண்டிருந்த போது, சம்பள உயர்வு வேண்டும் என்று அவருக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தினோம். நாங்கள் 5 சதவிகிதம் சம்பள உயர்வு கேட்டு போராட்டம் நடத்திய வேளையில், 25 சதவிகிதம் சம்பள உயர்வு வழங்கி அனைத்து பணியாளர்களையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார் என்று தமிழ் நேசனின் கணினிப் பிரிவின் முன்னாள் பக்க வடிவமைப்பாளரான இந்திராணி குறிப்பிட்டார்.
சுப்பிரமணியம்
தினமும் தமிழ் நேசன் பணிமனைக்கு வேலைக்கு வருவது சந்தோஷமான ஒன்றாகும். நாங்கள் அனைவருமே எந்தவொரு வேற்றுமையின்றி ஒரு குடும்பமாகவும் கலகலப்பாகவும் செயல்பட்டோம் என்றார் முன்னாள் அச்சுக் கோர்ப்பு பணியாளரான 70 வயது கே. சுப்பிரமணியம்.
தமிழ் நேசன் நிர்வாகம் எங்களுக்கு எந்தவொரு குறையையும் வைத்தது கிடையாது, கட்டுப்படுத்தியதும் கிடையாது. நாங்களும் அவர்களுக்கு எதிராக எந்த செயலிலும் ஈடுபட்டது கிடையாது. எங்களுக்கு முழு சுதந்திரம் வழங்கியதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். நாட்டின் முக்கிய நபர்கள் மற்றும் தலைவர்களுடன் தொடர்பு ஏற்படுவதற்கு தமிழ் நேசன் என்ற முத்திரை எங்களுக்குத் தொடர்பு பாலத்தை ஏற்படுத்தியது.
வேலை நிமித்தமாக வெளியில் செல்ல அவசியம் ஏற்படும் போது பலர் அறிமுகமாகினர். இவை எல்லாம் தமிழ் நேசனிலிருந்து எனக்கு கிடைத்த மறக்க முடியாத நினைவுகளாகும். இதன் மூலம், நான் தமிழ் நேசனிலிருந்து என் பணியை முடித்துக்கொண்டு, சுயத் தொழிலில் ஈடுப்பட்ட போது, அன்று அவர்களுடன் ஏற்பட்ட ஒரு நெருக்கமான உறவு எனது தொழிலுக்குப் பக்கப் பலமாக இருந்தது என்று தமிழ் நேசனில் 13 ஆண்டுகள் தாம் பணியாற்றிய காலத்தின் நினைவலைகளை சுப்பிரமணியம் பகிர்ந்துக்கொண்டார்.
மிஷன்மேன் சுப்ரா
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலையில் அந்த வாரத்திற்குரிய ஞாயிறு இணைப்புப் பதிப்பு முன்கூட்டியே அச்சடிக்கப்படும். அச்சு இயந்திரம் ஓடத் தொடங்கிய போது முதலில் நாங்கள் சோதிக்க வேண்டியது சிதறும் மையிலிருந்து பத்திரிகை முழுமையாக விடுப்பட்டு, அதன் வர்ணம் சரியாக அமர்ந்துள்ளதா? என்பதை சோதனையிட வேண்டும். அப்படி சோதித்துக் கொண்டு இருந்த போது.. எதிர்பாராத விதமாக என் கண்ணில் பட்ட ஒரு கவிதையைப் படித்தப் போது, அது மிகவும் அபத்தமாக இருப்பதைக் கண்டேன். ஏதோ தவறு நிகழ்ந்து விட்டது என்பதை உணர்ந்தேன்.
அந்த நேரத்தில் அலுவலகத்தில் இருந்த டத்தின் ஶ்ரீ இந்திராணி சாமிவேலுவிடம் ஓடிச்சென்று ஒரு பிரதியைக் காட்டி அதில் இருக்கக்கூடிய தவற்றைச் சுட்டிக்காட்டினேன். உணர்ச்சி வசப்பட்டவராக காணப்பட்ட டத்தின் ஶ்ரீ இந்திராணி, அச்சு இயந்திரத்தை உடனடியாக நிறுத்தச் சென்னார். அதுவரை அச்சிடப்பட்டுவிட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிகளை எரிக்கச் சொன்னார். மறுநாள், அந்த அபத்தமான கவிதைக்குக் காரணமாக இருந்த ஞாயிறு பொறுப்பாசிரியர், தலைமையாசிரியர் மற்றும் அந்த அபத்தமான கவிதைக்குப் பக்கம் வடிவமைப்பு செய்த ஓவியர் என மூவர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். இது தமிழ் நேசனில் பணியாற்றிய காலத்தில் மறக்க முடியாத சம்பவமாகும் என்று மிஷன்மேன் சுப்ரா நினைவுக்கூர்ந்தார்.
கே.ஏ. குணபதி
தமிழ் நேசனில் பணிப்புரிந்தக் காலக்கட்டத்தில், துன் டாக்டர் சாமிவேலுவின் வாழ்க்கை வரலாற்றைப் புத்தகமாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டிருந்த போது நிறைய இடையூறுகள் ஏற்பட்டன. துன் சாமிவேலுவிடம் இதைப் பற்றி சொன்ன போது, அதில் உள்ள பல தகவல்கள் அவருக்குப் பிடிக்காத காரணத்தால், அப்புத்தகத்தை வெளியிட வேண்டாம் என்று உத்தரவிட்டார். ஆனால், அவரது பேச்சை மீறி, தமிழ் நாட்டில் அந்தப் புத்தகத்தை அச்சடித்து, துன் சாமிவேலுவின் 50 ஆம் ஆண்டு பிறந்தநாளுன்று பரிசாக கொடுத்தேன். இதனால், அவரின் விரோதத்தை சம்பாதிக்க நேர்ந்தது. அக்காலக்கட்டத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தை என்னால் மறக்கவே முடியவில்லை. இதே போன்று மற்றொரு மறக்க முடியாத சம்பவம் என்னவென்றால், 1989 ஆம் ஆண்டு, தமிழ் நாடு, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வைர விழாக் கொண்டாட்டத்தின் போது சாமிவேலுவிற்கு டாக்டர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
அப்போது நான் எழுதிய அந்த வரலாற்று புத்தகமே அதற்கு குறிப்பு நூலாகப் பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகு எங்கள் இருவருக்கும் இடையில் மீண்டும் நட்புறவு மலரத் தொடங்கியது. இவ்வாறு பல நினைவலைகளைத் தமிழ்நேசன் எனக்குள் விட்டுச்சென்றுள்ளது என்று நினைக்கும் போது சற்று பெருமையாகத்தான் உள்ளது என்று 68 வயது குணபதி ஆறுமுகம் தமது நீங்கா நினைவுகளைத் திசைகளுடன் பகிர்ந்துகொண்டார்.
பத்துமலை
தமிழ் நேசன் கோலாலம்பூர், ஜாலான் அம்பாங், எண் 27 இல் செயல்பட்ட போது, தமிழ் நேசன் அலுவலக கட்டட வரிசையில் அமைந்திருந்த AIA காப்புறுதி கட்டடத்தில் 1975 ஆம் ஆண்டில் ஜப்பான் Red Army படையைச் சேர்ந்த கும்பல் ஒன்று அந்த முன்னணி காப்புறுதி கட்டடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு, பிணை நாடகம் நடத்தியது. பிணைப்பிடிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் போலீஸ் உட்பட அரசாங்கத்தின் முக்கியத் தலைவர்கள் ஈடுபட்ட காட்சியை நேரில் பார்க்கும் சந்தர்ப்பத்தைத் தமிழ் நேசன் ஏற்படுத்தி தந்தது மறக்க முடியாத அனுபவமாகும் என்று தமிழ் நேசன் பிழைத்திருத்தும் பகுதியில் பணியாற்றிய பத்துமலை சிதம்பரம் தெரிவித்தார்.
43 ஆண்டுகள் இந்தப் பத்திரிகை துறையில் சந்தித்த ஒவ்வொரு நினைவும் இன்னும் அழியா வண்ணமாக என்னுள் இருக்கிறது. எனக்கு கலைத் துறையின் மிகுந்த ஆர்வமும் உள்ளது. அப்போது தமிழ் நேசனின் பிரதிநிதியாக ஒரு நிகழ்ச்சிக்குச் செல்லும் போது, பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கலைஞர்களைப் பார்க்கும் வாய்ப்பு நிறைய கிடைத்தது. எம்.ஆர். ராதா, எம்.ஜி.ஆர் போன்ற நடிகர்களை நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பும் ஏற்பட்டதாக புரூப்ரீடர் பத்துமலை சிதம்பரம் குறிப்பிட்டார்.
திசைகளின் சிறப்பு பேட்டி
– மாலதி சண்முகம்