கோலாலம்பூர் உட்பட கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் தற்போது இந்தியர்களுக்காகவே அதிகமான அழகு ஒப்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. பெண்களுக்காக மட்டும் அல்ல. ஆண்களுக்காகவும் அவை செயல்பட்டு வருகின்றன. ஆண்களுக்கான மேக்கப் ஒரு காலத்தில் துளியளவும் இருந்ததில்லை.
ஆடை விஷயங்களில்தான் அதிக கவனம் செலுத்தி வந்தனர். கோலாலம்பூரில் உள்ள ஒப்பனை நிலையங்களுக்குச் சென்று பார்ப்போமானால், இடம் மாறி வந்து விட்டோமா? என்று சொல்லும் அளவிற்கு ஒப்பனைக்காக இந்திய இளைஞர்கள் வரிசைப்பிடித்து காத்திருத்திருக்கின்றனர்.
பியூட்டி பார்லர்களில் பெண்களுக்கு நிகராக ஆண்கள் கூட்டம் வழிகிறது. ஃ பேஷியல், ஹேர்ஸ்டைல், மசாஜ் செய்து கொள்வதற்கு ஆண்கள் போட்டி போட்டுக் கொண்டு காத்துக் கிடக்கிறார்கள். கோவிட் 19 – தொற்றுக்கு முன்பு இருந்த நிலையைப் போல தற்போது ஒப்பனை நிலையங்களின் ஆண்களின் எண்ணிக்கை களைக்கட்டியுள்ளது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கைகூட 40 விழுக்காடு அதிகரித்து விட்டதாக ஒப்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் கூறுகின்றர்.
பணத்தை இறைக்கத் துணியும் இந்த இளைஞர்கள் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் என்றெல்லாம் நினைத்துவிட வேண்டியதில்லை. நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களும், சற்று வயதானவர்களும் இங்கு படையெடுக்கின்றனர்.
ஒவ்வொரு ஆணும் அழகாக இருக்க வேண்டும், இளமையாக தோற்றம் அளிக்க வேண்டும், அழகு சாதனங்களின் வழி முகம் பளீட்சிட வேண்டும். தன்னை அதிகமானோர் பார்க்க வேண்டும். ஹேர் ஸ்டைலை வைத்து ஒருவரை மக்கள் எடைப் போட முடியும் என்ற நிலையிருப்பதால் தலைமுடியில் நமது இளைஞர்கள் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
இது தலைமுடியை கலைத்து விட்டுக்கொள்வதோ , சிலுப்பிவிட்டுக்கொள்வதோ, டிசைனாக வாரிக்கொள்வதோ ஹேர்ஸ்டைல் சமாச்சாரம் அல்ல. ஹேர்ஸ்டைல் என்றால் என்ன என்பதை விளக்கி கூறும் அளவிற்கு தங்கள் தலைமுடி ஒப்பனையில் அதிகமான ஆண்கள் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டனர்.
ஒருவர் தாம் விரும்பும் ஹேர்ஸ்டைலை கேட்டாலும் அவரின் தோற்றம், முக அமைப்பை வைத்து சில வேளைகளில் ஹேர்ஸ்டாலை நாங்களே பரிந்துரை செய்கிறோம். ஹேர் ஸ்டைல் மீது எவ்வளவு மோகம் இருக்கிறதோ அந்த அளவுக்கு வேண்டாத முடிகளை நீக்கும் வேக்ஸின், த்ரெட்டிங் முறைகள் மீதும் ஆண்களுக்கு ஆசை இருக்கிறது.
ஆண்கள் தங்களை அழகுப்படுத்திக்கொள்தற்கு முக்கிய காரணம் சமூக வலைத்தளங்கள்தான். முகநூல், படவரி, டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களின் தங்களை பற்றி பதிவேற்றம் செய்யும் போது குறிப்பாக, ஓர் உணவகத்தின் விதவிதமான உணவு வகைகளை உண்ணுவதை போல் செல்பி எடுத்துக்கொண்டு அதனை பதிவேற்றம் செய்யும் போது பார்ப்பதற்கு தாங்கள் அழகாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு ஆணும் விரும்புகின்றனர்.
தம்முடைய ஹேர் ஸ்டைலும், சருமத் தோற்றமும் ஓர் அனைத்துலக தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் ஆசைப்படுகின்றனர். திரைப்பட நடிகர்களின் மோகம், இவர்களுக்கு அதீத ஆர்வத்தை கிளப்பிவிட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டில் அதிகமாக இளைஞர்கள் உள்ளனர். டிக் டோக் செய்கின்றனர். டிக் டோக்கில் வித விதமாக தோற்றமும் பாவனையும் அளிக்க விரும்புகின்றனர். தங்களை மாறுப்பட்ட தோற்றத்தில் காட்ட முயற்சிக்கின்றனர். அதே வேளையில், டிக் டோக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில், தங்களின் புகைப்படத்தையோ அல்லது ஒரு காணொளியையோ பதிவேற்றம் செய்யும் போது மக்களிடமிருந்து ‘லைக்குகள்’ மற்றும் நல்ல கருத்துகள் பெற வேண்டும் என்பதற்காக தங்களின் உடல் தோற்றத்தில் மேலும் அழகை கூட்டுகின்றனர்.
இதே போன்று அலுவலகங்களில் பணியாற்றுகின்ற ஆண்களும் தங்களின் வெளித்தோற்றத்திற்கு முன்னுரிமை வழங்கி பெண்கள் மத்தியில் ஒரு கவன ஈர்ப்பு செய்ய விரும்புகின்றனர்.
இதனை ஒரு தேவையற்ற செலவு என்று சொல்லிவிட முடியாது. தங்களின் ஆளுமையை உயர்த்திக்கொள்ள அவர்கள் விரும்புகின்றனர் என்கிறார் பூச்சோங்கில் சொந்த பியூட்டி பார்லர் நடத்தி வரும் ஷான் டி சௌஸா.
தங்களின் தோற்றத்தை மெருகேற்றிக் கொள்ள ஒரு முறை பியூட்டி பார்லருக்கு வரும் போது கிட்டத்தட்ட 200 வெள்ளி முதல் 300 வெள்ளி வரை செலவழிக்கின்றனர். எப்படி நமது தோற்றத்தை வெளிப்படுத்திக் கொள்வது? எப்படி நமது அழகை மெருகூற்றிக் கொள்வது? முதலிய வெளிப்பார்வை அவர்களுக்குத் தேவைப்படுகிறது. அதற்கான முக்கியத்துவத்தை அளிக்கின்றனர்.
இது உண்மையிலே ஒரு புதிய அவதாரம் என்று கூட சொல்லலாம் என்று ஒப்பனைத் துறையில் நிபுணத்துவம் பெற்றவரான ஷான் டி சௌஸா தட்ச் பியூட்டி பார்லரின் உரிமையாளர் Shan De Souza கூறுகிறார்.
முன்பு ஆண்கள், தங்களின் மோட்டார் சைக்கிள்களையும் வாகனங்களையும் மாற்றி அமைக்க மக்களின் கவன ஈர்ப்புக்காக உபரிப்பாகங்களை வாங்குவதில் அதிக செலவு செய்தனர். குறிப்பாக, வாகனத்தின் சத்தத்தை இரைச்சல் மிக்கதாக ஆக்கிக்கொள்ள புகைப் போக்கியில் தேவையான மாற்றத்தை செய்வார்கள்.
இன்று அவர்களின் அதே தேவைகள் முகத் தோற்றத்திற்கு மாறியுள்ளது.இதற்காக செலவிடுவதில் அவர்கள் தயங்கியதில்லை. குறிப்பாக, முடித் திருத்தம், ஃ பேஷியல், ஹேர் கலர், ஹேர் டேட்டூ, கைவிரல் மற்றும் கால் விரல் ஒப்பனை, தாடிகளை அடர்த்தியாக வளர்ப்பது, வடிவமைத்துக் கொள்வது போன்ற ஒப்பனைகளை ஆண்கள் அதிகமாக விரும்புகின்றனர். ஃ பேஷியல் என்று கூறும் போது, வைட்னிங், முகப்பருக்கள் மற்றும் கரும் புள்ளிகளை நீக்குதல் போன்றவற்றை நேர்த்தியாக செய்து தங்களின் முக அழகை மெருகூற்றிக் கொள்கின்றனர்.
புகைப்பிடிக்கும் ஆண்கள் தங்கள் உதட்டில் காணப்படும் கருமையை அகற்றுவதற்கு லிப் வைட்னிங் செய்து கொள்கின்றனர். இதன் மூலம் அவர்களின் உதடுகள் பார்ப்பதற்கு பளிச்சென்று வசீகரமாக இருக்கும்.
லாரி ஓட்டுநர்கள் தங்கள் தலைமுடியில் எண்ணெய் போன்ற படிமத்தை கொண்டிருப்பதால் தலை முடியைப் பாராமரிப்பதற்குத் தேவையான ஒப்பனையைச் செய்து கொள்வதற்கு அதிகமாக வருகின்றனர்.
இவை அனைத்தும் தனி மனிதருடைய தேவை என்பதை விட இன்றைய அவசரத் தேவையாகும். ஆண்களுக்கு அலங்கார மோகம் பிறந்துள்ளது. ஆண் பாதி, அலங்காரம் மீதி என்ற நிலை உருவாகி இருக்கிறது.
-மாலதி சண்முகம்