தாப்பா மாவட்ட போலீஸ் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் கொண்டையனர் லோரி ஒன்று, பாதுகாவலர் சாவடி வேலியை மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் காயமுற்ற போலீஸ்காரர் ஒருவர் சிகிச்சைக்குப் பின்னர் உடல் நலம் தேறி வருவதாக பேரா மாநில போலீஸ் தலைவர் முகமட் யுஸ்ரி ஹசான் பஸ்ரி தெரிவித்தார். நேற்று அதிகாலை 1.25 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் காயமுற்ற 23 வயதுடைய போலீஸ்காரர், தாப்பா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றப் பின்னர் வீடு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது விடுப்பில் இருந்து வருவதாக முகமட் யுஸ்ரி குறிப்பிட்டார். நாற்காலி, மேஜை போன்ற தளவாடப் பொருட்களை ஏற்றி வந்த அந்த லோரி ஓட்டுநர், விசாரணைக்காக தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 31 வயதான அந்த ஓட்டுநர் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்பது பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.