மலேசியாவில் தமிழ், சீனப்பள்ளிகள் செயல்படுவதற்கு அரசமைப்புச்சட்டம் பாதுகாப்போ அல்லது உத்தரவாதமோ வழங்கவில்லை என்று வழக்கறிஞர் ஒருவர் புத்ராஜெயா, அப்பீல் நீதிமன்றத்தில் வாதிட்டார்.
நாட்டில் தமிழ், சீனப்பள்ளிகள் செயல்படுவது அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது என்று தீர்ப்பு வழங்கியது மூலம் கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி தவறு இழைத்து விட்டதாக வழக்கறிஞர் ஹனிஃபி கட்ரி அப்துல்லா ஆப்பீல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்பதால் தமிழ், சீனப்பள்ளிகளின் செயல்பாடு சட்டப்பூர்வமானது என்று அறிவித்து இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லானின் தீர்ப்பு ரத்து செய்யப்பட வேண்டும் என்று வழக்கறிஞர் ஹனிஃபி கட்ரி அப்துல்லா அப்பீல் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
தமிழ், சீனப்பள்ளிகள் நாட்டின் அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டவையாகும் என்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதித்து அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள இரண்டு மலாய் அமைப்புகளான மஜ்லிஸ் பெம்பஙுனான் பென்டிடிக்கான் இஸ்லாம் மலேசியா மற்றும்
கபுஙான் பெர்சத்துவான் பெனுலிஸ் நெஷ்னல் ஆகியவற்றின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹனிஃபி கட்ரி அப்துல்லா, உயர் நீதிமன்றத் தீர்ப்பு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மேல்முறையீட்டு வழக்கு மனு, அப்பீல் நீதிமன்ற நீதிபதி சுபாங் லியான் தலைமையில் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினரால் விசாரிக்கப்பட்டு வருகிறது.