தாயாரின் காதலனால் மிக கொடூரமாக சித்ரவதை செய்யப்பபட்டதாக நம்பப்படும் 3 வயது சிறுவன், தலைமண்டையில் விரிசல் ஏற்பட்டு, உடலில் பல பாகங்கள் செயலிழப்புக்கு ஆளாகி மலாக்கா மருத்துவமனையில் இறந்தான். இச்சம்பவம் இன்று காலையில் நிகழ்ந்தது. 24 வயது மாது தனது மூன்று வயது மகனை, மலாக்கா, செங்கில் உள்ள தனது காதலன் வீட்டிற்கு அனுப்பி வைத்த போது இத்துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட சிறுவனுக்கு வாந்தி வயிற்றுப் போக்கு ஏற்பட்டதாக கூறி அந்த ஆடவரால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த சிறுவன், சுயநினைவு இழந்த நிலையில் கிடந்ததை கண்டு மருத்துவர்கள் சோதனை செய்த போது உடலில் பலத்த காயங்களும் தழும்புகளும், வீக்கங்களும் இருப்பதை கண்டு பிடித்தனர்.
அந்த சிறுவன் பல முறை தாக்கப்பட்டுள்ளான். அவன் வயிற்றில் மிதிக்கப்பட்டுள்ளது, சிறுவனின் தலை சுவரில் முட்டப்பட்டுள்ளது. சிறுவனின் உடல் நிலையைக் கண்டு அவன் உடனடி சிகிச்சைக்கு அனுப்பப்பட்டான். எனினும் சிகிச்சை பலனின்றி அந்த சிறுவன் நேற்று காலை 9.15 மணியளவில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உதவும் வகையில் அந்த சிறுவனின் தாயார் மற்றும் அவரின் 25 வயது காதலன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் க்ரிஸ்தோஃபர் பெடிட் குறிப்பிட்டார்.
தமது காதலி அமரும் ஷோபாவில் அந்த சிறுவன் வாந்தி எடுத்து விட்டான் என்பதற்காக அந்த ஆடவர் சம்பந்தப்பட்ட சிறுவனை அடித்து துன்புறுத்தியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று க்ரிஸ்தோஃபர் பெடிட் தெரிவித்தார்.