- மூத்த அரசியவாதி நஸ்ரி அப்துல் அசிஸ் கோரிக்கை
வரும் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மலாய்க்கார அல்லாதவர்களின் ஆதரவை பெறுவதற்கு பாரிசான் நேஷனலின் தாய்க்காட்சியான அம்னோ, தனது உறுப்புக்கட்சிகளான மஇகா, மசீச.வை நம்புவதை விட டிஏபி யை நம்ப வேண்டும், அக்கட்சியுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று அம்னோவின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் பாடாங் ரெங்காஸ் எம்.பி.யுமான நஸ்ரி அப்துல் அசிஸ் கேட்டுக்கொண்டார்.
மலாய்க்கார அல்லாதவர்களின் ஆதரவை பெறுவதற்கு மஇகா மற்றும் மசீச.வுடன் ஒத்துழைப்பைவிட டிஏபி யுடன் அம்னோ ஒத்துழைத்தால் மட்டுமே மலாய்க்காரர் அல்லாதவர்களின் ஒட்டுமொத்த ஆதரவை அம்னோ பெற முடியும் என்ற எதார்த்த உண்மையை அம்னோ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் அமைச்சருமான நஸ்ரி அப்துல் அசிஸ், தெரிவித்துள்ளதாக மலேசியா கினி இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று நாட்டில் மலாய்க்காரர் அல்லாதர்வர்களின் ஆதரவை பெற்ற ஒரே கட்சி என்றால் அது டிஏபி தான். எனவே அந்த கட்சியுடன் அம்னோ ஒத்துழைப்பதுதான் மேலானது என்று அமெரிக்காவிற்கான மலேசியத் தூதரரமான நஸ்ரி அப்துல் அசிஸ் வலியுறுத்தியுள்ளார்.