லஞ்ச ஊழல் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் – மினால் தேடப்பட்டு வரும் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசினின் மருமகன், குற்றம் இழைக்கவில்லை என்றால் தலைமறைவாக வேண்டிய அவசியம் இல்லை என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
முகைதினின் மருமகன் முஹம்மது அட்லான் பெர்ஹான் உட்பட இரண்டு நபர்களை எஸ்.பி.ஆர்.எம் தேடி வருவதாக அந்த ஆணையம் நேற்று வெளியிட்டுவுள்ள ஓர் அறிக்கை தொடர்பில் கருத்துரைக்கையில் அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.
நாட்டின் 8 ஆவது பிரதமராக முகைதின் பொறுப்பேற்றிருந்த காலக்கட்டத்தில் உள்துறை அமைச்சு சம்பந்தப்பட்ட குத்தகைத் தொடர்பில் அவரின் மருமகன் லஞ்சம் பெற்றது, முறைக்கேடு புரிந்தது தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரையும், 69 வயது மற்றொரு நபரையும் எஸ்.பி.ஆர்.எம் தீவிரமாக தேடி வருகிறது.