சட்டமன்றத் தேர்தலில் தாங்கள் மிரட்டப்படுவதாக முறையிடம் வேட்பாளர்கள் அதற்குத் தகுந்த ஆதாரங்களைக் கொண்டிருக்க வேண்டும். மாறாக, ஆதாரங்கள் இன்றி மிரட்டப்படுவதாக அறிக்கை வெளியிட வேண்டாம் என்று போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை கேட்டுக்கொண்டுள்ளார். வேட்பாளர்கள் மிரட்டப்படுவது தொடர்பில் துல்லியமான தகவல்களையும், ஆதாரங்களையும் கொண்டிருக்கும் பட்சத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்டவர்கள் அதனை நேரடியாக போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். கெடா மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூர், மிரட்டப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு கருதி, அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட மாட்டார் என்றும் கெடா மாநிலத்தை சேர்ந்த எம்.பி. ஒருவர் கூறியிருப்பது தொடர்பில் அயோப் கான் எதிர்வினையாற்றினார். சனூசிக்கு மட்டுமல்ல. எந்த வேட்பாளருக்கும் இந்நிலை ஏற்பட்டால் அவர்களும் போலீசில் புகார் அளிக்க வேண்டும் என்று அயோப் கான் அறிவுறுத்தியுள்ளார்.