ஆஸ்ரேலியா, சிட்னியிலிருந்து கோலாலம்பூரை நோக்கிப் புறப்பட்ட மலேசியா ஏர்லைன்சுக்கு சொந்தமான எம்எச் 122 விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக புரளியைக் கிளப்பிய ஆஸ்ரேலிய பிரஜை ஒருவர் இன்று சிட்னி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார். 45 வயதுடைய அந்த ஆஸ்ரேலிய பிரஜை மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஒன்று விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக புரளியைக் கிளப்பி சக பயணிகளின் பாதுகாப்பிற்கு மிரட்டலை ஏற்படுத்தியது, இரண்டாவது விமான பணியாளர்களிடம் முரட்டுதனமாக நடந்துக் கொண்டது ஆகிய இரு குற்றச்சாட்டுகளை ஆஸ்ரேலிய பிரஜை எதிர் நோக்கி உள்ளார். நேற்று திங்கட்கிழமை சிட்னியில் இருந்து கோலாலம்பூரை நோக்கி பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்ட அந்த எம்எச்122 விமானம் ஆஸ்ரேலிய வான் போக்குவரத்து பாதையில் சென்று கொண்டிருந்த போது சம்பந்தப்பட்ட பயணி இத்தகைய அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கோலாலம்பூருக்குச் செல்வதற்கான பயணம் ரத்துசெய்யப்பட்டு மீண்டும் ஆஸ்ரேலியாவிற்கு விமானநிலையத்தில் தரையிறங்கியது. 45 வயதுடைய அந்த ஆஸ்ரேலிய பிரஜை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார். அந்த ஆஸ்ரேலிய பிரஜையில் இத்தகைய செயலினால் சிட்னி அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த 32 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆஸ்ரேலியா வான் போக்குவரத்து இலாகா அறிவித்துள்ளது