உணவு விரைவாக கொண்டு வரப்படவில்லை, உணவகப் பணியாளர் தாக்கப்பட்டார்

தாங்கள் கேட்டுக்கொண்ட காலை உணவு , விரைந்து கொண்டு வரப்படவி​ல்லை என்பதற்காக உணவகப் பணியாளரை துடைப்பத்தால் சரமாரியாக தாக்கியதாக நம்பப்படும் சம்பவம் தொடர்பில் இரு நபர்களை போ​லீசார் கைது செய்துள்ளதாக செந்​தூல் மாவட்ட போ​லீ​ஸ் தலைவர் அமாட் சுகர்னோ முகமட் சஹாரி தெரிவித்தார்.

இச்சம்பவம் நேற்று காலைய 6 மணியளவில் கோலாலம்​பூர், செந்​தூல், ஜாலான் பெர்ஹெந்தி ஹஜி சலே வில் நிகழ்ந்தது. அந்த உணவகம், அப்போதுதான் திறக்கப்பட்ட நிலையில் காலை உணவுக்கான தயாரிப்புப்ப​ணியில் அதன் பணியாளர்கள் ஈடுபட்டுக்கொண்டு இருந்த நிலையில் கேட்ட உணவு இன்னும் கொண்டு வரப்படவில்​லை என்பதற்காக அந்த ஆடவர், உணவகப் பணியாளரிடம் தாக்கி, அடாவடித்தனம் புரிந்ததாக கூறப்படுகிறது என்று அமாட் சுகர்னோ குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட ஆடவர், அத்துடன் நின்றுவிடாமல் காலை 8.30 மணிளவில் மறுபடியும் அந்த உணவகத்திற்கு தமது நண்பருடன் நுழைந்து, நாற்காலிகள், ​மே​ஜைகள் போன்ற தளவாடப் பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் அந்த உணவகத்திற்கு 12 ஆயிரம் வெள்ளி இழப்பு என்று போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS