சட்ட அம்சங்களில் இருக்கக்கூடிய சில பலவீனங்களை அடிப்படையாக கொண்டு, முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை கைவிடுவதற்கான முயற்சிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அம்னோ வலியுறுத்தியுள்ளது.
நஜீப்பிற்கு எதிராக வழக்குத் தொடுக்க போதுமான அடிப்படைகள் இல்லை என்பதால் அவர் மீதான 1எம்.டி.பி குற்றச்சாட்டுகளை கைவிடுமாறு பரிந்துரைக்கப்பட்ட ஒரு கடிதத்தை சட்டத்துறை தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
அன்றைய சட்டத்துறை தலைவருக்கு அரசாங்க தலைமை விசாரணையாளர் அனுப்பிய அந்த கடிதத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அம்சங்கள் உண்மையென்றால், அந்த கடிதத்தின் உள்ளடக்கத்தை முழுமையாக ஆராய்ந்து நஜீப்பை விடுதலை செய்ய வழிகாண வேண்டும் என்று அகமட் ஜாஹிட் கேட்டுக்கொண்டார்.
முன்னாள் பிரதமர் நஜீப், அன்றைய கருவூல தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ இர்வான் செரிகர் அப்துல்லா மீது 6 குற்றச்சாட்டுகளை தொடுக்க அடிப்படை முகாந்திரங்கள் இல்லை என்பதால் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட வேண்டும் என்று அன்றைய அரசு தரப்பு விசாரணையாளர் டத்தோ ஜமில் அரிஃபின் 12 பக்கங்களை கொண்ட ஒரு கடிதத்தை அன்றைய சட்டத்துறை தலைவருக்கு எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.