ஒட்டாவா: இந்தியா-கனடா இடையேயான மோதல் என்பது உச்சம் தொட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் கனடாவுக்கு எதிராக இந்தியா அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் 40 தூதர்களை வெளியேறும்படி இந்தியா அதிரடியாக அறிவித்துள்ளது. கூறியுள்ள நிலையில் கனடா ஷாக்கான நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பணிந்துள்ளார்.
இந்தியா-கனடா இடையேயான தற்போது சுமூகமான உறவு இல்லை. இரு நாடுகள் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் கனடா தான். அதாவது கனடாவில் வசித்து வந்த கேடிஎப் எனும் காலிஸ்தான் புலிப்படை தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் ஜூன் மாதம் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இவர் கனடாவில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டங்களை தீட்டி குழப்பத்தை ஏற்படுத்தி வந்தார். இவர் மீது இந்தியாவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த கொலை வழக்கில் இன்னும் கனடா தரப்பு துப்பு துலக்கவில்லை. ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை யார் கொலை செய்தார்கள்? என்பதை கண்டுபிடிக்க முடியாமல் கனடா திணறி வருகிறது.
இத்தகைய சூழலில் தான் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா மீது பகிரங்கமாக குற்றம்சாட்டினார். ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலைக்கும், இந்தியாவுக்கும் தொடர்பு உள்ளது. இந்தியாவின் ஏஜென்சி மூலம் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளிவந்து இருப்பதாக கூறினார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கனடா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. இது சரியான நடவடிக்கை இல்லை. ஆதாரங்களை கொடுத்தால் ஆய்வு செய்ய இந்தியா தயாராக இருக்கிறது என கூறியது.
ஆனால் ஜஸ்டின் ட்ரூடோ வெறுமனே வாய்மொழியாக மட்டும் இந்தியாவை குற்றம்சாட்டி விட்டு ஆதாரங்களை வெளியிடாமல் உள்ளார். இதனால் அவரது குற்றச்சாட்டில் உண்மையில்லை என இந்தியா உறுதியாக கூறி வருகிறது. ஆனாலும் ஜஸ்டின் ட்ரூடோ அவ்வப்போது இந்தியாவை சீண்டும் வகையில் குற்றம்சுமர்த்தி வருகிறார். மேலும் கனடாவில் உள்ள இந்திய தூதரை வெளியேற ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டார்.