மனித வள அமைச்சின் கீழ் செயல்படும் H.R.D. Corp. ( எச்.ஆர்.டி. கோர்ப். ) எனும் மனித வள மேம்பாட்டு நிறுவனம், ஆடம்பர செலவுகளிலும் முறைகேடுகளிலும் ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் மனித வள அமைச்சர் வி. சிவகுமார், பிஏசி எனப்படும் பொது கணக்காய்வுக்குழு விசாரணை வளையத்திற்குள் இழுக்கப்பட்டுள்ளார். வரும் திங்கட்கிழமை பொது கணக்காய்வுக்குழு விசாரணையில் அமைச்சர் சிவகுமார் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
எச்.ஆர்.டி. கோர்ப். தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ ஷாகுல் ஹமிட், மனித வள அமைச்சின் துணைத் தலைமைச் செயலாளர் டத்தோ அம்ரான் அஹ்மாட் ஆகிய இருவரும் பொதுக் கணக்காய்வுக்குழு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் விசாரணையில் மனித வள அமைச்சர் வி. சிவகுமார் ஆஜராக வேண்டும் என்று பொது கண்காய்வுக் கேட்டுக்கொண்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
200 கோடி வெள்ளி மதிப்பிலான எச்.ஆர்.டி. கோர்ப்., தொழில்திறன் பயிற்சிகள் மற்றும் மனித மூலதன மேம்பாடு ஆகியவற்றை முதன்மை நோக்கமாக கொண்டு மனித வள அமைச்சின் கீழ் அமைக்கப்பட்டுள்ள ஓர் ஏஜென்சியாகும் எச்.ஆர்.டி. கோர்ப்.பல்வேறு முறைகேடுகள், ஆடம்பர செலவுகள் என பணத்தை வாரி இறைத்து இருப்பதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியுள்ளது.
டத்தோ ஷாகுல் ஹமிட் தலைமையிலான எச்.ஆர்.டி. கோர்ப்.பில் நிகழ்ந்துள்ளதாக கூறப்படும் முறைகேடுகள் பல கோடி வெள்ளியாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இவர்களில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் தவறான நடவடிக்கைகள் கடந்த மூன்று ஆண்டு காலமாக அரசாங்க கண்களில் படாமல் மிக ரகசியமாக வைக்கப்பட் டுஇருந்ததாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் எச்.ஆர்.டி. கோர்ப். தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ ஷாகுல் ஹமிட், மனித வள அமைச்சின் துணைத் தலைமைச் செயலாளர் டத்தோ அம்ரான் அஹ்மாட் சம்பந்தப்பட்ட இந்த விவகாரம் தொடர்பில் மனித வள அமைச்சர் சிவகுமாரை பொது கணக்காய்வுக்குழு விசாரணைக்கு அழைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.