பாலஸ்தீனத்திற்கு மலேசியா தனது இராணுவத்தை அனுப்பி வைக்க வேண்டிய அவசியம் குறித்து ஒரு மதிப்பீட்டை செய்யும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பில் ஐ.நா. மன்றத்தின் முடிவிற்கு பிறகு மலேசியா இது குறித்து பரிசீலிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். NAM ( நாம் ) எனப்படும் அணி சேரா நாடுகள் அமைப்பு மற்றும் ஐ.நா.பேரவை ஆகியவற்றில் உறுப்பியம் பெற்றுள்ள நாடு என்ற முறையில் பாலஸ்தீனத்திற்கு தனது இராணுவத்தை அனுப்பி வைப்பது குறித்து மலேசியா தன்னிச்சையாக முடிவு செய்து விட முடியாது என்பதையும் அமைச்சர் விளக்கினார்.
அதேவேளையில் ஐ.நா. பேரவை எடுக்கக்கூடிய எந்த முடிவாக இருந்தாலும் அந்த முடிவு எந்த அளவிற்கு மலேசியாவிற்கு சாத்தியமாகும் என்பது குறித்து மலேசியா ஒரு மதிப்பீட்டை செய்யும் என்று முகமட் ஹசான் தெளிவுபடுத்தினார்.