மலேசிய சோஷலிச கட்சியான பிஎஸ்எம்மின் தலைவர் டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் உட்பட நான்கு முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்படும் அளவிற்கு பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ள பேரா, கந்தன் நிலக்குடியேற்றக்காரர்களின் விவசாய நிலத்திலிருந்து விவசாயிகள் வெளியேற்றப்படும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு ஈப்போ உயர் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.
அடுத்த ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி வரையில் நிலக்குடியேற்றக்காரர்கள் அவ்விடத்திலிருந்து வெளியேற்றப்படுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக ஆறு விவசாயிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே. குணசேரன் தெரிவித்தார். விவசாயிகளை அந்த நிலக்குடியேற்றப்பகுதியிலிருந்து வெளியேற்றுவதற்கு பேரா மாநில நில மற்றும் கனிம வள இலாகா மேற்கொண்ட நடவடிக்கைக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.