தீபாவளி வர்த்தகத்தில் அந்நிய நாட்டு வியாபாரிகள் ஆக்கிரமிப்புஅமலாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

இந்துப்பெருமக்கள் தீபாவளி திருநாளை கொண்டாடுவதற்கு இன்னும் 15 நாட்களே எஞ்சியிருக்கும் இவ்வேளையில் இந்தியர்கள் வர்த்தகம் செய்யும் லிட்டில் இந்தியா உட்பட இந்தியர்களின் முக்கிய வர்த்தகத் தளங்களை ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கும் அந்நிய நாட்டு வியாபாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இந்திய வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். .

வர்த்தக உரிமம், வாடைக்கட்டணம், உட்பட அனைத்து செலவினத்தையும் ஏற்று வர்த்தகம் நடத்தி வரும் மலேசிய இந்திய வர்த்தகர்களுக்கு சவால் விடும் வகையில் குவிந்து கிடக்கும் அந்நிய நாட்டு வியாபாரிகளின் வரவினால் முறையாக கடை வைத்து வியாபாரம் செய்து வரும் வர்த்தகர்களும், விழா கால வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள இந்திய சிறு வர்த்தகர்களும் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் வர்த்தர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

உள்ளூர் வியாபாரிகள் லைசென்ஸின்றி வியாபாரம் செய்தால் அவர்களின் வர்த்தக உடமைகளை பறிமுதல் செய்யும் கோலாலம்பூர் மாநகர் மன்ற அமலாக்க அதிகாரிகள், பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா போன்ற இந்தியர்களின் வர்த்தகத் தளத்தில் புற்றீசலைப் போல படையெடுத்துள்ள அந்நிய நாட்டு விபாபாரிகளுக்கு எதிராக இதுவரையில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று இந்திய சிறுவியாபாரிகளின் குரலாக ஒலிக்கும் ஜவுளிக்கடை உரிமையாளரும், இந்து ஆகம அணியின் துணைத் தலைவருமான திருமதி எஸ். கலா பாலமுரளி கேள்வி எழுப்பினார்.

தீபாவளி சந்தையை ஏற்று நடத்துவதற்கான டெண்டரை கோலாலம் பூர் மாநகர் மன்றம் ஒவ்வொரு ஆண்டும் ஒரே நபருக்கு வழங்கி வரும் பாரபட்சப் போக்கையும் கலா பாலமுரளி சாடினார்.

இப்பிரச்னைக்கு தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்று கலா பாலமுரளி வலியுறுத்துகிறார்.

குறிப்பாக, பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவிற்கென்று ஒரு சங்கமே உள்ளது. அந்த சங்கம் முன்னின்று தீபாவளி சந்தையை வழிநடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமானால் இந்திய வியாபாரிகள் நிச்சயம் ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்குவார்கள். இதன் மூலம் அந்நிய வியாபாரிகளின் ஊடுருவலை தடுக்க முடியும் என்று கலா பாலமுரளி வலியுறுத்துகிறார்.

WATCH OUR LATEST NEWS