நவீன தொடர்புத்துறை காலத்தில் ஆங்கிலமொழி பயன்பாட்டை தவிர்க்க இயலாது என்று சபா முன்னாள் முதலமைச்சர் சாலெ சாயிட் கெருவாக் தெரிவித்துள்ளார். அதிகாரத்துவ மொழியாக மலாய் கொள்கை அளவில் விளங்கினாலும் ஆங்கிலமொழியின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் உணர்ந்து இருக்க வேண்டும், இல்லையேல் காலத்தால் பின்தள்ளப்பட்டு விடுவோம் என்று சபா அம்னோ தலைவர்களில் ஒருவரான சாலெ சாயிட் கெருவாக் குறிப்பிட்டார்.
சபா, சரவா மாநில அரசாங்கங்களை பொறுத்தவரையில் ஆங்கில மொழிக்கு இன்னமும் முக்கியத்துவமும்,முன்னுரிமையும் வழங்கி வருவதைசாலெ சாயிட் சுட்டிக்காட்டினார். வெளிநாடுகளிலிருந்து வருகின்ற முதலீட்டளார்களையும், கல்வி பயில வருகின்ற மாணவர்களையும் தொடர்பு கொள்வதற்கு ஆங்கிலமொழி பயன்பாடு இன்றியமையாததாகும்.
அனைத்துலக மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆங்கில மொழியிலும் ஆளுமை கொண்டு இருந்தால்தான் ஓர் ஆளுமை நிறைந்த நாட்டை முன்னெடுக்க முடியும் என்று சபா முன்னாள் ஆளுநரின் மகனான சாலெ சாயிட் குறிப்பிட்டார்.
அரசாங்க அலுவலகங்களுக்கு எழுதப்படும் கடிதங்கள் இனி மலாய்மொழியில் இருந்தால் மட்டுமே அவை கவனிக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கூறியிருப்பது தொடர்பில் எதிர்வினையாற்றுகையில் சாலெ சாயிட் இதனை தெரிவித்தார்.