ஈப்போ மாநகரில் ஆயுதமேந்திய நிலையில் வீடு புகுந்து கொள்ளையடித்தல், மற்றவர்களை காயப்படுத்துதல் போன்ற கடுங்குற்றச் செயல்களுக்காக போலீசாரால் மிக தீவிரமாக தேடப்பட்டு வந்த ஜீவா கொள்கைக் கும்பலின் தலைவன் உட்பட அந்தக் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த நால்வரை போலீசார் வளைத்துப் பிடித்தனர்.
ஜீவா கொள்ளைக் கும்பல் பிடிபட்டது மூலம் ஈப்போ மாநகரில் தாமான் சானிங், தாமான் ஈபோ தீமூர், பெர்ச்சாம் ஆகிய பகுதிகளில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக போலீஸ் கூறுகிறது.
பலவந்தமாக செயல்பட்டது தொடர்பில் 24 குற்றச்செயல்களையும், வீடு புகுந்து கொள்ளையடித்தது தொடர்பில் 34 குற்றச்செயல்களையும் இக்கும்பலுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி யாஹாயா ஹாஸ்ஸான் தெரிவித்தார்.
பிடிபட்ட நால்வரில் ஜீவா கும்பலின் தலைவனை தவிர மற்ற மூவர் பெண்கள் ஆவர். 26 க்கும் 35 க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த நால்வரும் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 5.45 மணியளவில் ஈப்போ, தாமான் ஷாபாஸில் உள்ள ஒரு வீட்டில் கைது செய்யப்பட்டதாக யாஹாயா ஹாஸ்ஸான் குறிப்பிட்டார்.
உள்ளூரை சேர்ந்த இந்த நால்வரும் குற்றவியல் சட்டம் 395 பிரிவின் கீழ் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.