இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள அனைத்துலக நெருக்கடி விவகாரத்தில் மலேசியாவில் உள்ள பள்ளி மாணவர்களை கல்வி அமைச்சு சம்பந்தப்படுத்தக்கூடாது என்பதே சரவா மாநில டிஏபியின் நிலைப்பாடாகும் என்று அம்மாநில டிஏபி தலைவர் சொங் சியெங் ஜென் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்கள், சிறு குழந்தைகள். வெளியுலக விவகாரத்தை இன்னும் அறிந்திராத பருவத்தில் உள்ளவர்கள். படிப்பு என்றால் என்ன என்பதை இப்போதுதான் கற்கத் தொடங்கியுள்ள அவர்களை பாலஸ்தீனத்திற்கு, மனிதாபிமான ஆதரவை தெரிவிக்க ஒற்றுமை வாரத்தை நடத்துமாறு அறிவுறுத்துவது ஏற்புடைய செயல் அல்ல என்று சொங் சியெங் ஜென் தெரிவித்தார்.
சவராக்கில் உள்ள பள்ளிகளில் பாலஸ்தீன ஒற்றுமை வாரத்தை கடைப்பிடிப்பது கட்டாயமில்லை என்பதை சரவா மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான சொங் சியெங் ஜென் குறிப்பிட்டார்.
இதனை துணை கல்வி அமைச்சர் லிம் ஹுய் யிங்கும் உறுதி படுத்தியுள்ளதையும் சொங் சியெங் ஜென் சுட்டிக்காட்டினார்.
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு நல்கும் வகையில் ஒற்றுமை வாரத்தை கடைப்பிடித்து, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நிகழ்ச்சிகளை நடத்துமாறு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு கல்வி அமைச்சு ஓர் சுற்றறிக்கையின் வாயிலாக உத்தரவிட்டு இருப்பது சரவா மாநிலத்தில் உள்ள அனைத்து நிலைகளிலும் உள்ள மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாக சொங் சியெங் ஜென் தெரிவித்தார்.