ஓர் இனத்திற்கு மட்டுமே பிரதமர் பதவியா? சபா – சரவாவில் பிரிவினையை ஏற்படுத்தி விடும் / எச்சரிக்கிறார் சட்ட வல்லுநர்

மலேசியாவில் பிரதமர் பதவியை மலாய்க்காரர்கள் மட்டுமே வகிக்க முடியும் என்பதை வரையறுப்பதற்கு நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையும், குறிப்பாக சபா, சரவாக்கில் பிரிவினையை ஏற்படுத்தி விடும் என்று சபா சட்ட வரைவு சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ ரோஜெர் சின் எச்சரித்துள்ளார்.

மலேசியாவின் கட்டமைப்பாக விளங்கும் அரசியலமைப்பு சட்டம், அனைவருக்கும் பொதுவானதாகும். அந்த சட்டத்தில் ஒரு தரப்பினருக்கு ஆதராக மேற்கொள்ளப்படும் எந்தவொரு சட்டத்திருத்தமும், சமூக ஒப்பந்தத்தை மீறுவது மட்டுமல்ல, மாநிலங்களுக்கு இடையில் பிரிவினையையும், பேதங்களையும், வெறுப்புணர்ச்சியையும் விதைத்து விடும். குறிப்பாக, சபா, சரவா ஓரங்கட்டப்பட்டு விட்டதற்கான உணர்வு மேலோங்கும் என்று டத்தோ ரோஜெர் சின் நினைவுறுத்தியுள்ளார்.

நாட்டு மக்களிடையே சமநிலையை வலுப்படுத்த வேண்டும். சபா, சரவா உட்பட அனைத்து மலேசியர்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் அதேவேளையில் பூமிபுத்ரா உரிமைகளை நிலைநிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பிரதமர் பதவி என்பது மலாய்க்காரருக்கும், முஸ்லீம்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதை வரையறுப்பதற்கு அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு ஆதரவு தெரிவித்து இருக்கும் பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவரும், மச்சாங் எம்.பி.யுமான வான் அஹ்மாட் ஃபைசால் வான் அஹ்மாட் கமால்லின் நடவடிக்கை குறித்து கருத்துரைக்கையில் டத்தோ ரோஜெர் சின் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS