செலாயாங்,ஜன.4
அண்மையில் ரவாங், கம்போங் சுங்ஙாய் சோ- வில் ஆடவர் ஒருவரை கொடூரமாக அடித்து கொலை செய்தப் பின்னர் சடலத்தை வீட்டின் பின்புறத்தில் புதைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் உட்பட ஐந்து இந்தியர்கள் செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒரு சகோதரனும், ஒரு சகோதரியும் அடங்குவர்.
குணசேகரன் கோபாலன், மாலினி கோபாலன், தேவி சுந்தர், சரவணன் பூமலதாயன் மற்றும் விக்னேஸ்வரன் பிரேம் குமார் ஆகிய ஐந்து நபர்களுக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
20 க்கும் 34 க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த ஐவரும், கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி காலை 8 மணிக்கும் பிற்பகல் 3.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் 19 வயதுடைய அஷோக் செல்வராஜு என்ற இளைஞரை அடித்து கொலை செய்து, சடலத்தை வீட்டின் பின்புறம் புதைத்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 40 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 12 பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் ஐவரும் கொலை குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
ஐவருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதால் அவர்களுக்கு ஜாமீன் வழங்க அனுமதி மறுக்கப்பட்டது. ஐவர் மீதான கொலை வழக்கு, ஷா ஆலம் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதால் சம்பந்தப்பட்டவர்களிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
சம்பவம் நடந்த அன்று கம்போங் சுங்கை சோவில் உள்ள ஓர் இந்தியர் வீட்டில் ஆடவர் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டதாக அண்டை வீட்டுக்காரர்கள் அளித்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து, அந்த வீட்டை மோப்ப நாயுடன் சோதனையிட்ட போலீசார். வீட்டின் பின்புறம் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட அஷோக் செல்வராஜ் என்பவரின் சடலத்தை தோண்டி எடுத்தனர்.
போலீஸ் விசாரணையின் போது கைது செய்யப்பட்டவர்களில் கொலை செய்யப்பட்ட ஆடவரின் காதலியும் அடங்குவார்.
இந்த கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட குணசேகரன் கோபாலன் மற்றும் அவரின் மற்றொரு தம்பியான 30 வயது டண்டேம் கோபாலன் ஆகியோர் மீது மற்றொரு குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
கொலை செய்யப்பட்ட நபரின் உடலை அழிப்பதற்கு யார் கண்களிலும் படாமல் சடலத்தை வீட்டின் பின்புறம் புதைத்ததாக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டள்ளது.
இவர்களில் டண்டேம் கோபாலன் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை என்பதால் அவர் மட்டும் 5 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஐவரில் ஒருவரின் தங்கை சம்பந்தப்பட்ட ஆபாசப்படத்தை, கொலையுண்ட நபர் விநியோகித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சம்பந்தப்பட்ட நபர் பிடிக்கப்பட்டு, வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.