பத்துமலைத் திருத்தலத்தில் மின்படிகள் மற்றும் பொது மண்டபம்

அடுத்த ஆண்டு தைப்பூச விழா கொண்டாடத்திற்கு முன்னதாக பத்துமலைத் திருத்தலத்தில் படிகட்டின் அருகிலேயே எக்ஸ்கிளேட்டர் மின் படிகள் மற்றும் ஒரே நேரத்தில் மூவாயிரம் பேர் அமரக்கூடிய பொது மண்டபம் போன்றவற்றை கட்டி முடிப்பதற்கு கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானம் உறுதி பூண்டு இருப்பதாக அதன் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ ஆர். நடராஜா தெரிவித்தார்.

இது தொடர்பாக தைப்பூசத்திற்கு முன்னதாகவே சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நல்லதொரு செய்தியை அறிவிப்பார் என்று தேவஸ்தானம் நம்பிக்கை கொண்டு இருப்பதாக டான்ஸ்ரீ நடராஜா குறிப்பிட்டார்.

இன்று பத்துமலைத் திருத்தலத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான தைப்பூச் கொண்டாட்ட ஏற்பாடுகள் குறித்து நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் டான்ஸ்ரீ நடராஜா இதனை தெரிவித்தார்.

நடக்க முடியாதவர்கள், பத்துமலைத் திருத்தலத்தில் குன்றின் மீது அமர்ந்து இருக்கும் வேலாயுதர் கோயிலுக்கு செல்வதற்கு ஏதுவாக எக்ஸ்கிளேட்டர் மின் படிகள் திட்டத்திற்கு சிலாங்கூர் அரசிடம் தேவஸ்தானம் அனுமதி கோரியுள்ளதாக டான்ஸ்ரீ நடராஜா குறிப்பிட்டார்.

இன்று காலையில் பத்துமலை திருத்தலத்திற்கு சிறப்பு வருகை புரிந்த டி.ஏ.பி பொதுச் செயலாளரும், போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக்கிடம் இது குறித்து தாம் கலந்து பேசியிருப்பதாக டான்ஸ்ரீ நடராஜா தெரிவித்தார்.

அமைச்சருடன் வந்திருந்த சிலாங்கூர் மாநிலத்தை சேர்ந்த இரு ஆட்சிக்குழு உறுப்பினர்களிடம் இத்திட்டம் குறித்து அவர் கோடிகாட்டியுள்ளார்.

அனைத்துமே கைக்கூடுமானால், அடுத்த ஆண்டு தைப்பூச விழாவில் மேற்கண்ட ஏற்பாடுகள் பத்துமலைத் திருத்தலத்தில் பக்தர்களின் வசதிகளுக்காக உருவாக்கப்பட்டு விடும் என்று டான்ஸ்ரீ நடராஜா தெரிவித்தார்.

இந்த செய்தியார்கள் கூட்டத்தில் தைபூசத்தையொட்டி சேவற் கொடிஏற்றுதல், வெள்ளி ரதம் செல்லும் சாலைகள் , பாதுகாப்பு ஏற்பாடுகள் உட்பட பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் ஏற்படுத்தி தந்துள்ள வசதிகள் குறித்து டான்ஸ்ரீ நடராஜா விவரித்தார்.

WATCH OUR LATEST NEWS