படிவம் ஒன்றுக்கு செல்லும் மாணவர்களுக்கு அறிமுக நிகழ்ச்சி

2024 ஆம் ஆண்டில் முதலாம் பாரத்திற்கு செல்லவிருக்கும் மாணவர்களுக்கு அறிமுக நிகழ்ச்சி ஒன்று, பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் ஏற்பாட்டில் வரும் ஜனவரி 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பட்டர்வெர்த், ஜாலான் மெங்குவாங், டேவான் ஶ்ரீ மாரியம்மான் மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.

தொடக்கப்பள்ளிகளில் தங்களின் ஆறு ஆண்டு கல்வியை முடித்து விட்டு, இடைநிலைப்பள்ளிக்கு மாறிச்செல்லும் ஒன்றாம் படிவ மாணவர்கள், இடைநிலைப்பள்ளிகளில் புதிய கல்விச்சூழலுக்கு தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ளும் வகையில் இந்த அறிமுக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பினாங்கு அறப்பணி வாரியத்தின் கல்விக்குழுத் தலைவர் டாக்டர் இரா. லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

பினாங்கு மாநிலத்தில் ஆறாம் ஆண்டு கல்வியை முடித்து விட்டு படிவம் ஒன்றுக்கு செல்லவிருக்கும் மாணவர்களுக்காக நடத்தப்படும் இந்த அறிமுக நிகழ்வு சுமார் 250 மாணவர்களுக்கு நடத்தப்படவிருக்கிறது.

இந்த இலவச நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு வழங்கப்படும். ஆர்வமுள்ள மாணவர்கள் தங்கள் பெயர், பள்ளியின் பெயர், கைப்பேசி அல்லது தொடர்பு எண்களை 013 – 4256548 எண்ணில் WhatsApp மூலமாக திரு. செல்வாவிடம் வழங்கலாம் என்று டாக்டர் லிங்கேஸ்வரன் கேட்டுக்கொள்கிறார்.

மாணவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டிய இறுதி நாள் வரும் ஜனவரி 28 ஆம் தேதியாகும்.

WATCH OUR LATEST NEWS