பினாங்கு,ஜன.17
பினாங்கு தைப்பூச விழா கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர் முழு வீச்சில் செய்து வரும் வேளையில் மதுபானம் இல்லாத தைப்பூசத்தை கொண்டாடும் வகையில் ஆலய வளாகம் வீற்றிருக்கும் பகுதியிலிருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கடைகளில் மதுபான விற்பனைக்கு தற்காலிகமாக தடை விதிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக பினாங்கு, தண்ணீர்மலை, அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தின் தலைவர் லெ. நரேஷ்குமார் தெரிவித்தார்.
5 கிலோ மீட்டர் சுற்றளவில் செயல்பட்டு வரும் 24 மணி நேர கடைகள், உணவகங்கள், மளிகை கடைகள் போன்ற வர்த்தக தளங்களில் தைப்பூச விழாவையொட்டி இரண்டு, மூன்று தினங்கள் மதுபானத்தை விற்க வேண்டாம் என்று அமலாக்கத் தரப்பினரின் ஒத்துழைப்புடன் கேட்டுக்கொள்ளப்போவதாக நரேஷ்குமார் குறிப்பிட்டார்.
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் ஆர் ராயர், துணைத் தலைவர் டாக்டர் இரா. லிங்கேஸ்வரன் மற்றும் இதர ஆணையர்கள் முன்னிலையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தண்ணீர்மலை அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தானத்தின் தலைவர் நரேஷ் குமார் இவ்வாறு விவரித்தார்.
முருகப்பெருமானின் உற்சவத் திருநாளான தைப்பூச விழா, பக்தி கமலும் விழாவாக விளங்கிட வேண்டும். மதுமாபனங்களை விற்பதற்கான உரிமைங்களை சம்பந்தப்பட்ட வர்த்தக தளங்கள் கொண்டிருந்த போதிலும் மதுபானம் அருந்திவிட்டு ஒரு சிலர் செய்யக்கூடிய தவறுகளினால் தைப்பூச விழாவிற்கு களங்கம் ஏற்பட்டு விடக்கூடாது. எனவே சமயத்தின் பெயரிலும், மனிதநேயத்தின் பெயரிலும் மூன்று நாட்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட வர்த்தகத் தளங்களின் ஒத்துழைப்பை ஆலய நிர்வாகம் கோருவதாக நரேஷ்குமார் தெரிவித்தார்.