கோலாலம்பூர், மார்ச் 1 –
இஸ்லாத்தின் உயர்வு கட்டாயம் தற்காக்கப்பட வேண்டும் என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங், கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி பாஸ் ஊடகத் தளத்தில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை தொடர்பில் அரச மலேசிய போலீஸ் படை புலன் விசாரணை செய்து வருவதாக அதன் தலைவர் தான் ஶ்ரீ ராசாருடின் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
1948 ஆம் ஆண்டு தேச நிந்தனை சட்டம் மற்றும் 1998 ஆம் ஆண்டு தொடர்பு, பல்லூடகச் சட்டம் ஆகியவற்றின் கீழ் பாஸ் கட்சித் தலைவர் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகிறார். இது தொடர்பாக விசாரணை அறிக்கையும் திறக்கப்பட்டுள்ளதாக ஐஜிபி தெளிவுபடுத்தினார்.
அப்துல் ஹாடி அவாங், சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்த கருத்தானது, கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி மலேசிய இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான தேசிய மன்றக்கூட்டத்தில் அந்த மன்றத்தின் தலைவரான மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாரிபுடின் இட்ரிஸ் ஷா ஆற்றிய உரையை தொடர்பு படுத்தி பேசுவதாக அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது.
இதன் தொடர்பில் சிலாங்கூர் சுல்தான், தமது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். குறிப்பாக ஹாடி அவாங் வெளியிட்ட இந்த அறிக்கை, மலாய் ஆட்சியாளர்களை அவமதிக்கும் வகையில் நிந்தனை தன்மையில் அமைந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது..