சிலாங்கூர், மே 09-
சிலாங்கூர், கோல குபு பாரு சட்டமன்ற தொகுதியில், இந்திய வாக்காளர்களின் பிரச்சனைகளைக் கேட்டறிய, மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருதின் ஷாரி, அச்சமூகத்தினரை நேரில் சந்தித்திருப்பதாக, அவரது பத்திரிக்கை செயலாளர் ஜே ஜே டெனிஸ் தெரிவித்தார்.
அச்சமூகத்தினரை நேரில் சந்திப்பதற்கான எண்ணம் அமிருதின் ஷாரி-யிடம் இதுவரையில் காணப்படவில்லை என கிள்ளான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சார்லஸ் சாண்டியாகோ முன்வைத்துள்ள பகிரங்க குற்றச்சாட்டை அவர் முற்றிலுமாக மறுத்தார்.
நேற்று மாலையில், உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுதீன் நசுட்டியோன் இஸ்மாயில்-லுடன் இணைந்து, அமிருதின் ஷாரி, கோல குபு பாரு-வைச் சேர்ந்த அரசு சாரா அமைப்புகள், குடியிருப்பாளர் சங்கங்கள், கல்விமான்கள் என சுமார் 120 இந்திய தலைவர்களைச் சந்தித்து, அச்சமூகத்தினரின் பிரச்சனைகளைக் கேட்டறிந்துள்ளார்.
அச்சந்திப்பில் பேசிய சைபுதீன் நசுட்டியோன், இந்தியர்களின் குடியுரிமை விண்ணப்பங்கள் தொடர்பான பிரச்சனைகளைக் களைய, கூட்டரசு அரசாங்கம் கொண்டுள்ள கடப்பாட்டை விவரித்தார்.
அதேவேளையில், அமிருதின் ஷாரி பேசுகையில், கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு, வழிப்பாட்டு தலங்கள் உள்ளிட்ட விவகாரங்களில், இந்திய சமூகத்தினருக்கு உதவ, மாநில அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளதை விளக்கினார்.
அது தவிர, அண்மையில், கோலா சிலாங்கூர் மற்றும் ஹுலு சிலாங்கூர்-ரிலுள்ள 5 தோட்டங்களைச் சேர்ந்த இந்திய தொழிலாளர்களை நேரில் அழைத்து, அவர்களின் வீடமைப்பு திட்டம் குறித்து தொடர்பான கோரிக்கையை அமிருதின் ஷாரி கேட்டறிந்துள்ளார்.
அதன் பலனாகவே, லாடாங் மேரி, லாடாங் நைஜர் கார்ட்னர், லாடாங் புக்கிட் தாகார், லாடாங் சுங்காய் திங்கி, லாடாங் மினியாக் ஆகிய தோட்டங்களை சேர்ந்த அத்தொழிலாளர்களுக்கு வீடுகளைக் கட்டித் தருவதற்கான கடப்பாட்டை வீடமைப்பு ஊராட்சி அமைச்சு வழங்கியிருந்ததையும், ஜே ஜே டெனிஸ் சுட்டிக்காட்டினார்.