பெட்டாலிங் ஜெயா, ஜூன் 24-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் பாஸ் கட்சி இணையப் போவதாக கூறப்படும் தகவலை DAP பொதுச் செயலாளர் அந்தோணி லோக் மறுத்துள்ளார்.
ஒற்றுமை அரசாங்கத்தில் பாஸ் கட்சி இணைவது குறித்து இதுவரையில் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. அதற்கான அழைப்பும் விடுக்கப்படவில்லை என்று அந்தோணி லோக் தெளிவுபடுத்தினார்.
ஒற்றுமை அரசாங்கங்கத்தின் பேச்சாளர் பாஹ்மி பட்சில் கூறியுள்ள உள்ளார்ந்த கருத்தை தகவல் சாதனங்கள் தவறாக புரிந்து கொண்டன என்று தாம் நம்புவதாக போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனலின் முதன்மை உறுப்புக்கட்சியாக விளங்கி வரும் அந்த மதவாதக் கட்சி, ஒற்றுமை அரசாங்கத்தின் இணையப் போவதாக வெளிவந்துள்ள தகவலை அரசாங்கப் பேச்சாளர் பாஹ்மி பட்சில் உறுதிப்படுத்தவில்லை என்று தகவல் சாதனங்கள் தெரிவித்து இருந்தன.
குறிப்பாக, பாஸ் கட்சியுடன் நிறைய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக பாஹ்மி பட்சில் தெரிவித்து இருந்தார்.
எனினும் பாஸ் கட்சியுடனான இந்தப் பேச்சுவார்த்தை பெரும்பாலும் கூட்டரசு அரசாங்கத்திற்கும், மாநில அரசாங்கத்திற்கும் இடையிலான விவகாரங்களை உள்ளடக்கிய பேச்சுவார்த்தையாகும் என்று அந்தோணி லோக் விளக்கினார்.