சவுதியில் இந்த ஆண்டு வெயில் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருந்ததால், ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டவர்களில் 1300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் இந்தியர்கள் 100 பேர் வரை இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹஜ் புனித பயணம் என்பது ஒவ்வொரு இஸ்லாமியரின் கடமையாக இருக்கிறது. வாழ்நாளில் ஒரு முறையாவது ஹஜ் பயணம் மேற்கொண்டு விட வேண்டும் என்று இஸ்லாமியர்கள் தங்கள் வாழ்நாள் குறிக்கோளாக கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டும் ஹஜ் புனித யாத்திரையில் உலகம் முழுவதும் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கெடுத்திருக்கிறார்கள். ஆனால் இந்த முறை சவுதியில் வெயில் அதிகமாக இருப்பதால் புனித பயணத்திற்கு வந்த யாத்திரிகள் சிலர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த சில நாட்காளாக சவுதியில் 51 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெயில் பதிவாகியிருந்தது. இப்படியாக அதிகப்படியான வெயில் மற்றும் வெப்ப அலை காரணமாக, யாத்திரை மேற்கொள்ளும் பயணிகள் காலை 11 முதல் மதியம் 3 மணி வரை வெளியில் வர வேண்டாம் என்று அந்நாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மட்டுமல்லாது பயணிகளுக்கு ஏசி வசதியுடன் கூடிய தங்கும் இடங்கள் மற்றும் தேவையான மருத்துவ வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறார்கள்.
இருப்பினும் வெயில் தாக்கத்தால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. கடந்த சில நாட்களில் மட்டும் வெயில் தாக்கத்தால் 19 பயணிகள் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டில் மட்டும் 1300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் 100 பேர் வரை இந்தியர்களாக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது போன்று உயிரிழப்புகள் ஏற்படுவது இது முதல் முறையல்ல. கடந்த 30 ஆண்டுகளில், ஹஜ் பயணத்தின்போது நெரிசல்கள், தீ விபத்து, வெயிலின் தாக்கம் உள்ளிட்டவற்றால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.