இந்தியா,ஜுன் 25-
ஒரு சிறுகோள் பூமியைத் தாக்கும் வாய்ப்பு 72% உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. துல்லியமாக ஜூலை 12, 2038 அன்று அந்த சிறுகோள் பூமியைத் தாக்கலாம் என்றும் நாசா கூறுகிறது.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, அபாயகரமான சிறுகோள் ஒன்று பூமியைத் தாக்க 72% வாய்ப்பு இருப்பதாகவும், அதைத் தடுக்க நாம் போதுமான அளவு தயாராக இல்லை என்றும் கண்டறிந்துள்ளது.
நாசா இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை விண்கற்கள் பூமியைத் தாக்கும் சாத்தியக்கூறுகள் பற்றியும் அதனை எதிர்கொள்வதற்கான தயார் நிலை பற்றியும் கலந்தாய்வு நடத்துகிறது. இந்த ஆய்வு ஐந்தாவது முறையாக ஜூன் 20ஆம் தேதி அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ஆய்வகத்தில் நடைபெற்றது.
இந்தக் கலந்தாய்வில் நாசாவைத் தவிர, பல்வேறு அமெரிக்க அரசு நிறுவனங்கள் மற்றும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 100 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அப்போது, எதிர்காலத்தில் பூமிக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களுக்கான சாத்தியம் பற்றி ஆலோசிக்கப்பட்டது.
இதுபற்றி நாசா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒரு கற்பனையான சூழ்நிலையில் இதுவரை கண்டறியப்படாத சிறுகோள் அடையாளம் காணப்பட்டது எனவும் இது பூமியைத் தாக்கும் வாய்ப்பு 72% உள்ளதாக ஆரம்பக் கணக்கீடுகளின்படி மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. துல்லியமாக ஜூலை 12, 2038 அன்று அந்த சிறுகோள் பூமியைத் தாக்கலாம் என்றும் அதற்கு இன்னும் 14.25 ஆண்டுகள் இருக்கிறது என்றும் நாசா கூறுகிறது.
ஆனால், சிறுகோளின் அளவு, பாதை போன்றவற்றைத் துல்லியமாக தீர்மானிக்க இந்த ஆரம்பக் கண்காணிப்பு போதுமானதாக இல்லை என்று நாசா குறிப்பிட்டுள்ளது.