கோலாலம்பூர், ஜூன் 27-
துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமது ஜாஹிட் சம்பந்தப்பட்ட லஞ்ச ஊழல் வழக்கை தொடர்வதில்லை என்று சட்டத்துறை தலைவர் எடுத்துள்ள முடிவை எதிர்த்து மலேசிய வழக்கறிஞர் மன்றம் தொடுத்திருந்த வழக்கு மனுவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
அகமது ஜாஹிட் சம்பந்தப்பட்டுள்ள வழக்கு தொடர்பான சில சட்டச் சிக்கல்களை கூட்டரசு நீதிமன்றத்தின் வாயிலாக தீர்வு காண்பதற்கு வழிவிடப்பட வேண்டும் என்று வழக்கறிஞர் மன்றம் செய்து கொண்ட விண்ணப்பத்திற்கும் உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்தது.
சட்ட சிக்கல்களை மேற்கோள் காட்டி வழக்கறிஞர் மன்றம் செய்து கொண்ட இரு விண்ணப்பங்களையும் நிராகரிப்பதாக உயர் நீதிமன்ற நீதிபதி அமர்ஜித் சிங் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
லஞ்ச ஊழல், சட்டவிரோத பணமாற்றம், நம்பிக்கை மோசடி தொடர்பில் 47 கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த அம்னோ தலைவருமான அகமது ஜாஹிட்டை வழக்கில் இருந்து விடுவிக்காமல் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிப்பதற்கு சட்டத்துறை தலைவர் செய்திருந்த முடிவை எதிர்த்து மலேசிய வழக்கறிஞர் மன்றம் இவ்வழக்கை தொடுத்து இருந்தது.
அகமது ஜாஹிட் தொடர்புடைய யயாசன் அகல்புடி அறவாரியம் சம்பந்தப்பட்ட இவ்வழக்கில் குற்றச்சாட்டும் அளவிற்கு அடிப்படை முகாத்திரங்கள் இருக்கின்றன என்று கூறி எதிர்வாதம் புரிய அழைக்கப்பட்ட பின்னர் அவர் மீதான லஞ்ச ஊழல் வழக்கை தொடர்வதில்லை என்று முடிவு செய்துள்ள சட்டத்துறை தலைவரின் முடிவை கேள்வி எழுப்பி, வழக்கறிஞர் மன்றம் இந்த வழக்கை தொடுத்து இருந்தது.