ஜசின், ஜூலை 8-
வீட்டில் முன்பு வாடகைக்கு இருந்தவரால் கைவிட்டு சென்று இருக்கலாம் என்று நம்பப்படும் MORTAR ரக வெடிகுண்டு ஒன்றை வீட்டு உரிமையாளர் ஒருவர் கண்டு பிடித்துள்ளார்.
மலாக்கா, மெர்லிமாவில் கடந்த சனிக்கிழமை அந்த வாடகை வீட்டை சுத்தம் செய்வதற்கு முற்பட்ட அண்டை வீட்டுக்காரர், அந்த வீட்டில் வெடிகுண்டு இருப்பதை கண்டு வீட்டு உரிமையாளருக்கு தெரியப்படுத்தியதாக ஜசின் மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் அஹ்மத் ஜமீல் ரட்ஸி தெரிவித்தார்.
அந்த வீட்டில் வாடகைக்கு இருந்தவர், கடந்த ஜனவரி மாதம் வீடுமாறியதைத் தொடர்ந்து, அந்த வீட்டில் யாரும் குடியமர்த்தப்படவில்லை என்று 65 வயதுடைய மாதுவான அந்த வீட்டு உரிமையாளர் தனது போலீஸ் புகாரில் தெரிவித்துள்ளார்.
தகவல் கிடைத்து அந்த வீட்டிற்கு விரைந்த மலாக்கா, போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினர் 300 மில்லிமீட்டர் நீளமும் 60 மில்லிமீட்டர் அகலமும் கொண்ட அந்த வெடிகுண்டை மீட்டதாக அஹ்மத் ஜமீல் குறிப்பிட்டார்.
எனினும் அந்த வெடிகுண்டு வெடிக்கும் ஆற்றலை கொண்டு இருக்கவில்லை என்பது சோதனையில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
வாடகைக்கு இருந்தவர், வீட்டு வாடகைத் தொடர்பில் , வீட்டு உரிமையாளரை அச்சுறுத்துவதற்காக அந்த வெடிகுண்டை பரிசாக விட்டு சென்று இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.