கோம்பக் சேத்தியா, ஜூலை 8-
டிக் டாக் சமூக ஊடகத்தில் இணைய பகடிவதை மற்றும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி, தற்கொலை செய்து கொண்ட ஈஷா என்ற ராஜேஸ்வரி மரணம் தொடர்பில் 35 வயது பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
இன்று திங்கட்கிழமை, அதிகாலை 1.45 மணியளவில் சிலாங்கூர், ரவாங், புக்கிட் பெருந்துங் கோல்ஃப் ரிசார்ட், ஜாலான் செம்பகா 2 இல் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 35 வயது பெண் கைது செய்யப்பட்டதாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ACP அஹ்மத் சுகர்னோ முகமது ஜஹாரி தெரிவித்தார்.
ஈஷா என்ற ராஜேஸ்வரி மரணம் தொடர்பில் அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளா அந்தப் பெண், விசாரணைக்கு ஏதுவாக தடுப்புக்காவலில் வைப்பதற்கு அவர் இன்று காலையில் கோலாலம்பூர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, மாஜிஸ்திரேட்டின் ஆணைப் பெற்றப்பட்டுள்ளதாக ACP அஹ்மத் சுகர்னோ குறிப்பிட்டார்.
தற்போது இச்சம்பவம் 506 குற்றவியல் சட்டம் மற்றும் 1998 ஆம் ஆண்டு பல்லூடக சட்டத்தின் கீழ் முழு வீச்சில் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தனக்கு எதிராக அவதூறாகவும், அபாசமாகவும் பேசி டிக் டாக்கில் வெளியிடப்பட்ட காணொளியினால் அவமானத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளானதாக கூறப்படும் கோலாலம்பூர், கோம்பக் சேத்தியாவைச் சேர்ந்த 29 வயதுடைய ஈஷா என்ற ராஜேஸ்வரி கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
ஈஷாவை டிக் டாக் வாயிலாக அச்சுறுத்தியது தொடர்பில் கடந்த ஜுலை 6 ஆம் தேதி 39 வயதுடைய நபர் போலீஸ் புகார் ஒன்றை செய்து இருப்பதாக ACP ஹ்மத் சுகர்னோ குறிப்பிட்டார்.
இப்போலீஸ் புகார் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட புலன் விசாரணையில் கடந்த ஜுன் 30 ஆம் தேதி இரவு 10.15 மணியளவிலும், ஜுலை முதல் தேதி அதிகாலை 4.10 மணியளவிலும் ஈஷாவிற்கு எதிராக டிக் டாக் வாயிலாக இந்த மிரட்டல் விடுக்கப்பட்டதை போலீசார் கண்டறிந்தனர்.
சம்பந்தப்பட்ட நபர், Dulal Brothers மற்றும் Tik Tok Alphaquinnsha என்ற இரண்டு டிக் டாக் கணக்கு வாயிலாக ஈஷாவிற்கு மிரட்டல் விடுத்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
போலீஸ் புகார் செய்த நபர், கோலாலம்பூர், ஜாலான் ஈப்போ, லோரோங் கோலம் ஏர் 8 என்ற முகவரில் இருந்த போது, ராஜேஸ்வரிக்கு எதிரான அந்த இரண்டு டிக் டாக் காணொளிகளை பார்த்ததாகவும், ஈஷாவிற்கு எதிராக இத்தகைய அச்சுறுத்தலை ஏற்படுத்திய நபரக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் துறையை கேட்டுக்கொண்டதாக ACP அகமது சுகர்னோ குறிப்பிட்டார்.
இந்த புகார் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஈஷாவிற்கு எதிராக வெளியிடப்பட்ட அந்த இரண்டு காணொளிகளும் அழிக்கப்பட்டுள்ளன. இதனை வெளியிட்ட நபர் தொடர்பில் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டதில் ரவாங்கில் 35 வயதுடைய பெண் பிடிப்பட்டதாக ACP அகமது சுகர்னோ இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையல் தெரிவித்துள்ளார்