திருச்சி, ஜூலை 17-
திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிக்கு எதிரான 15ஆவது லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியானது 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
லைகா கோவை கிங்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகளுக்கு இடையிலான டிஎன்பிஎல் 2024 தொடரின் 15ஆவது லீக் போட்டி கோயம்புத்தூரில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற லைகா அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி திருச்சி சோழாஸ் முதலில் பேட்டிங் செய்தது. இதில், போட்டியின் 2ஆவது ஓவரிலேயே அர்ஜூன் மூர்த்தி 3 ரன்னுக்கு ரன் அவுட்டானார். அதன் பிறகு திருச்சி அணி வீரர்கள் வரிசையாக தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.
வசீம் அகமது 17 ரன்களும், ஷியாம் சுந்தர் 5 ரன்னும், கேப்டன் ஆண்டனி தாஸ் 0 ரன்னும், பிஎஸ் நிர்மல் குமார் 3 ரன்னும், சரவண குமார் 1 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அப்போது திருச்சி அணி 9.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து சஞ்சய் யாதவ் மற்றும் ஜாஃபர் ஜமால் இருவரும் கூட்டணி சேர்ந்து 7ஆவது விக்கெட்டிற்கு 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்துக் கொடுத்தனர்.