நான்கு ஆண்டுகள் குடும்ப வாழ்க்கைக்கு பிறகு நானும் நடாஷாவும் ஒருமனதாக பிரிந்து வாழ முடிவு செய்து இப்பொழுது பிரிகிறோம் என்று ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிச் இருவரும் கடந்த 2020 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஹர்திக் பாண்டியா இந்திய கிரிக்கெட் வீரர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், நடாஷாவை பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

ஹிந்தியில் ஒளிபரப்பான பிக் பாக்ஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான நடாஷா அரிமா நம்பி படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியிருக்கிறார். அவர் ஒரு மாடல் மற்றும் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. மாடல் மற்றும் நடிகை என்பதால் விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

முதலில் இருவரும் ஒரு நிகழ்ச்சியின் போது பார்ட்டியில் சந்தித்து அதன் பிறகு நட்பாக பழகி வந்துள்ளனர். இதையடுத்து இருவரும் காதலர்களாக மாறி, காதலை லிவிங் டூகெதர் உறவுக்கு கொண்டு சென்றுள்ளனர். அதில், நடாஷா கர்ப்பமான நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இதைத் தொர்ந்து 2 மாதங்களில் ஜூலை 30 ஆம் தேதி மகன் அகஸ்தியா பிறந்துள்ளார். இதையடுத்து கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் வந்திருந்தனர். இந்த நிலையில் தான் கடந்த சில மாதங்களாகவே இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

ஐபிஎல் தொடரின் போது கூட ஹர்திக் பாண்டியா ஆலங்களுக்கு செல்வது பூஜை செய்வது என்று இருந்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பாண்டியா ஓவராக ஆட்டிடியூட் காட்டியதாக அவர் மீது விமர்சனம் எழுந்தது. ஐபிஎல் 2024 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய 14 போட்டிகளில் 4ல் வெற்றியும், 10ல் தோல்வியும் அடைந்து பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியது.
பின்னர் இருவரும் ஒன்றாக இருந்த இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை எல்லாம் நீக்கினர். தனித்தனியாக இருக்கும் புகைப்படங்களை மட்டுமே பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர். இதனால் இருவரும் பிரிய இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இது குறித்து இருவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை.
இதற்கிடையில் நடாஷா செர்பியா நாட்டிற்கு புறப்பட்டு செல்வது போன்ற ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து நேற்று இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில், 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டிருந்தார்.

ஆனால், டி20 தொடருக்கான இந்திய அணிக்கு கேப்டனாகவும் அறிவிக்கப்படவில்லை. அதோடு டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு துணை கேப்டனாகவும் கூட அறிவிக்கப்படவில்லை. இதற்கு முன்னதாக நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு பாண்டியா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நானும் நடாஷாவும் பரஸ்பரமாக பிரிகிறோம் என்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: 4 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கைக்கு பிறகு நானும் நடாஷாவும் பரஸ்பரமாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம்.